அடுத்த ஒரு ஆண்டில்.. எட்ட முடியாத உயரத்திற்கு பறக்கும் தங்கம் விலை.. என்ன காரணம்! எவ்வளவு உயரும்!
சென்னை: தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே இப்போது இஸ்ரேல் ஈரான் இடையே நேரடியாகவே போர் வெடித்துள்ள நிலையில், தங்கம் விலை மேலும் உயரும் சூழல் உருவாகியுள்ளது. தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் எவ்வளவு தூரம் உயரம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை 31% உயர்ந்துள்ளது. நடப்பு 2025ஆம் ஆண்டின் அதிகபட்ச லாபத்தைக் கொடுத்த முதலீடாகத் தங்கம் இருக்கிறது. புவிசார் அரசியல் மற்றும் மேக்ரோ எகானமி நிலைகள் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை
குறிப்பாகக் கடந்த 74 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ₹10,000 உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளில் 16 ஆண்டுகளில் தங்கம் ஒரு லாபத்தையே கொடுத்துள்ளது. இது தங்கம் விலை எந்தளவுக்கு நிலையான லாபத்தைக் கொடுத்து வருகிறது என்பதையே உணர்த்துவதாக இருக்கிறது.
சர்வதேச பொருளாதாரம், புவிசார் அரசியல் சூழல் காரணமாகத் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் அதிகரித்தால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும். இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை $3,500ஆக உயர்த்தக்கூடும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் தங்கம் ரூ.10,600ஐ தாண்டும் என்கிறார்கள்.
இன்னும் உயரும்
இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "3500 மார்க்கை தங்கம் விலை தாண்டினால் விலை இன்னும் அதிகரிக்கும். அதிகபட்சமாக அவுன்ஸ் $3,590 வரை உயரக்கூடும்.. அதன் பிறகே தங்கம் விலை கொஞ்சம் குறையலாம். இந்தியச் சந்தையில், 10 கிராம் தங்கம் ₹1,05,000 வரை செல்லக்கூடும்" என்கிறார்கள்.
வென்ச்சுரா செக்யூரிட்டீஸின் கமாடிட்டி டெஸ்க் தலைவர் என்.எஸ். ராமசாமி என்பவரும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் என்றே கூறியிருக்கிறார். தங்கம் விலை அடுத்த சில காலங்களில் $3,540 என்ற புதிய உச்சத்தைத் தொடும் என்கிறார் ராமசாமி. அவர் மேலும் கூறுகையில், "ப்யூச்சர் கோல்ட் ஆகஸ்ட் தற்போது ₹98,900இல் சப்போர்ட்டை கொண்டுள்ளது. மேலும் குறுகிய காலத்தில் ₹1,02,000 வரை போகலாம்" என்றார்.
தங்கம் விலை எவ்வளவு உயரும்
அதேபோல பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் தங்கம் விலை குறித்து சில முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கி போல உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறதாம். இதனால் இந்தாண்டு இறுதிக்குள் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் $3,700ஆகவும் (ஒரு கிராம் ரூ.11,200), 2026ல் முதல் ஆறு மாதங்களில் $4,000ஆகவும் (ஒரு கிராம் ரூ.12,100) உயரும் என்று கணித்துள்ளது..
குறைய வாய்ப்பு இருக்கா?
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை உயரும் என்பது நிச்சயம்.. எவ்வளவு உயரும் என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது. இஸ்ரேல்- ஈரான் மோதல், அமெரிக்கா சீனா வர்த்தக மோதல், டிரம்ப் நிலைப்பாடு என எல்லாமே சீரானால் மட்டுமே தங்கம் விலை குறையும். அவை எல்லாம் உடனடியாக நடக்க வாய்ப்புகள் குறைவு என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications