நாளை எழுந்தவுடன் கடைக்கு ஓடுங்க! சர்வதேச மார்கெட்டில் ஒரேயடியாக எகிறிய தங்கம் விலை! இன்னும் உயருமாம்
வாஷிங்டன்: இந்தியாவில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே இப்போது சர்வதேச மார்கெட் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச மார்கெட்டில் இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து உச்சம் தொட்டு இருக்கிறது. தங்கம் விலை திடீரென இந்தளவுக்கு உயர என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம்.
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1,200 உயர்ந்தது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 68,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு கிராம் ரூபாய் 8,560க்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் சந்தை மட்டுமின்றி உலக சந்தையிலும் இப்போது தங்கம் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச மார்கெட்
சர்வதேச சந்தையில் இப்போது தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை குறித்த தகவல் சற்று நேரத்திற்கு முன்பு வெளியானது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை சுமார் 3% உயர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. டாலர் மதிப்பு தொடர்ந்து வருவதும் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளதும் இதற்குக் காரணமாகும். இதுபோன்ற குழப்பங்கள் அதிகரித்து வருவதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.
புதிய உச்சம்
அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் (24 கேரட்) ஒரு அவுன்ஸ் ஒரு கட்டத்தில் $ 3,171.49 வரை உயர்ந்தது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் ரூ. 9,628 வரை சென்றது. அதன் பிறகு இப்போது $3,168.26க்கு உள்ளது. அதாவது கிட்டதட்ட ரூ.9,615க்கு உள்ளது. இதுவும் கூட கிட்டதட்ட 2.8% அதிகம் தான். அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் 3.5% உயர்ந்து $3,185.50 ஆக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் ரூ.9,671ஆக இருக்கிறது.
என்ன காரணம்
இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்கா சீனா இடையே அதிகரிக்கும் வர்த்தக போர் தான். அமெரிக்காவும் சீனாவும் சர்வதேச அளவில் இரு பெரும் பொருளாதாரமாக இருக்கிறது. அப்படியிருக்கும் போது சீனா மீது டிரம்ப் வரிகளை அறிவித்துள்ளார். அதாவது மற்ற நாடுகள் மீதான வரியை 90 நாட்கள் நிறுத்தி வைத்த டிரம்ப், சீனா மீதான வரியை மட்டும் 104%இலிருந்து 125% ஆக உயர்த்தினார். அமெரிக்கா சீனா இடையே பெரியளவில் வர்த்தகம் இருக்கும் சூழலில் இது இரு நாடுகளையும் பாதிக்கும். இதன் காரணமாகவே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை புதிய உச்சத்திற்குப் போய் இருக்கிறது.
இது தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் நிகோஸ் ட்சபோராஸ் கூறுகையில், "பாதுகாப்பன புகலிடமாக தங்கத்தைக் கருதியே முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.. இதனால் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. வர்த்தக பதற்றங்கள் தங்கம் விலை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. மேலும், ஒருவேளை டாலரை வலுப்படுத்தவும் பணவீக்கத்தைக் குறைக்கவும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும்" என்றார்.
என்ன நடக்கும்
இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஜூன் மாதம் கூட்டத்தில் மீண்டும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் வட்டியை ஒரு சதவிகிதம் வரை குறைக்க வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படி அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை பட்டென உயரத் தொடங்கிவிடும்.
அதேநேரம் தற்போது டாலர் மதிப்பும் தொடர்ச்சியாகச் சரிந்து வருகிறது. டாலர் மதிப்பு சுமார் ஒரு சதவிகிதம் வரை குறைந்துள்ளதால் மற்ற நாடுகள் தங்கத்தை வாங்கக் குறைந்த பணத்தையே செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை அமெரிக்கா அளவுக்கு உயரவில்லை. பிளாட்டினம் 0.3% உயர்ந்து $940.24ஆகவும், பல்லேடியம் 1.5% சரிந்து $918ஆகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications