இனி அனுபவம் கொண்ட ஐடி ஊழியர்கள் தேவையில்லை.. புதிய ரூட்டை தேர்வு செய்த ஐடி நிறுவனங்கள்!
இந்திய ஐடி சேவைத் துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் புதிய பணியமர்த்தல் கொள்கை பின்பற்றத் தொடங்கியுள்ளது. இனி வரும் காலக்கட்டத்தில் நடுத்தர நிலை ஊழியர்களை அதிகம் பணியமர்த்துவதற்கு பதிலாக, இளம் பட்டதாரிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை வழங்கி பணியாற்ற வைக்கும் உத்தியை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.
2026ஆம் நிதியாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா உள்ளிட்ட டாப் ஐடி சேவை நிறுவனங்களில் லேட்டரல் ஹைய்ரிங் அதாவது அனுபம் கொண்ட நடுத்தர பதவிகளில் இருக்கும் ஊழியர்களை பணியில் அமர்த்துவது 0.5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் டாப் ஐடி சேவை நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்துவதில் உறுதியாக இருந்தன. Xpheno என்ற ஹைய்ரிங் நிறுவனத்தின் தரவுகளின்படி, டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களில் நடுத்தர நிலை ஊழியர்கள் 31,500 பேர் குறைந்துள்ளனர்.
வருமான அழுத்தம் மற்றும் AI செலவு
ஏஐ தொழில்நுட்பத்தால் புதிய திட்டங்கள் கிடைப்பதில் அதிகப்படியான தடுமாற்றம் இருந்து வரும் வேளையில், நிறுவனங்களுக்கு வருமானத்தையும், லாபத்தையும் உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அதிக சம்பளம் பெறும் அதிக அனுபவம் மிக்க ஊழியர்களை விட, பிரஷ்ஷர்களை பணியமர்த்துவது அதிக லாபகரமாக உள்ளது.
இதோடு AI சேவைக்காக செலவு அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம். AI மூலம் கோடிங் எழுதுதல், டெஸ்டிங் மற்றும் செயல்பாடுகளில் 30 முதல் 50 சதவீதம் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதால், குறைவான ஊழியர்களுடன் நிலையான வருமானத்தை பெற முடிகிறது. இதனால் தேவையில்லாத செலவுகளை குறைக்கும் பணியில் தற்போது ஐடி சேவை நிறுவனங்கள் இறங்கியுள்ளது.
TCS கடந்த நிதியாண்டில் 40000 பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்தியது. இது இத்துறையில் அதிக எண்ணிக்கை. அதே நேரத்தில் 12,000 நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகளை வெளியேற்றியது. இதேபோல் காக்னிசண்ட் நிறுவனம் Project Leap என்ற திட்டத்தின் கீழ் ஊழியர்களை வெளியேற்றியது. ஆனால் 20,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த உறுதி செய்துள்ளது.
இன்போசிஸ் 2027ஆம் நிதியாண்டில் 20,000 பிரஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ (LTM) கல்லூரிகளில் பிரஷ்ஷர்களை தேடி வருகிறது.
அதிக சம்பளம்
AI, கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் சிறப்பு திறன் கொண்ட பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 8.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நடுத்தர நிலையில் உள்ள ஊழியர்கள் சிறப்பு திறன் கொண்டவர்களை மட்டும் தேர்வு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இது நிறுவனங்களுக்கு செலவைக் குறைத்து, உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது.
இதனால் மூத்த அதிகாரிகள் மற்றும் நடுத்தர நிலை ஊழியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications