அமெரிக்காவை காப்பாற்ற டிரம்ப் செய்யும் வேலை.. முகமது பாகர் கலிபாஃப் சொன்ன உண்மை!
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் வெளியிட்ட ட்வீட் சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபாஃப் மறைமுகமாக சொன்ன விஷயங்களை நேற்று கீதா கோபிநாத்-ம் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
கலிபாஃப் பதிவின் மூலம் ஈரான் மோதல் காரணமாக உலக நிதிச் சந்தையில் மறைமுக அழுத்தம் அதிகரித்து வருவதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். இதேவேளையில் அமெரிக்கா தனது சொத்துக்களின் மதிப்பையும் சந்தையின் மதிப்பையும் காப்பாற்ற பெரிய அளவிலான கடன்களை அளிக்க தயாராகி வருகிறது.

கரன்சி ஸ்வாப் லைன்
நாணய ஸ்வாப் லைன் என்பது நாடுகளுக்கு இடையேயான அவசரகால நிதி உதவி ஒப்பந்தம். இதன் மூலம் ஒரு நாட்டுக்கு நிதி தேவைப்படும் சமயத்தில் அமெரிக்க டாலர்களை விரைவாகப் பெற முடியும். போர், பொருளாதாரத் தடை அல்லது எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டால் டாலர் பற்றாக்குறை ஏற்படும்.
அப்போது அமெரிக்கப் பங்குகள், பத்திரங்கள் போன்ற சொத்துகளை அவசரமாக விற்க வேண்டிய நிலை ஏற்படும். இது சந்தையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஸ்வாப் லைன் இத்தகைய அவசர விற்பனையைத் தடுக்கும் "நிதி ஆக்ஸிஜன் சிலிண்டர்" போன்றது.
தற்போது அமெரிக்கா தானாக முன்வந்து வளைகுடா நாடுகளை கரன்சி ஸ்வாப் லைன் கடன்களை வாங்கிக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் அமெரிக்க சொத்துக்கள், அமெரிக்க பங்குகள், டாலர் முதலீடுகள் விற்கப்படுவது குறைக்கப்படும்.
கலிபாஃப் ட்வீட்
கலிபாஃப் தனது ட்வீட்டில் "ஸ்வாப் லைன்கள் கொடுப்பது... வளைகுடா நாடுகள் அமெரிக்க சொத்துகளின் ஒழுங்கற்ற விற்பனையைத் தடுக்க" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் அர்த்தம்:
- சில நாடுகள் மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் அமெரிக்க சொத்துகளை விற்க விரும்பினாலும், அதற்கு அனுமதி இல்லை.
- சிலருக்கு "ஒற்றை இலக்க சதவீதம்" (single-digit %) மட்டுமே விற்க அனுமதி உள்ளது.
- சந்தை மோசமடைந்தால் விற்பனை விண்டோ மூடப்படும்.
இவை அனைத்தையும் செய்யவே அமெரிக்கா ஸ்வாப் லைன்களை திறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
எனவே "இப்போது இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெளியேறுங்கள்" என்ற எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார். அமெரிக்க பத்திரச் சந்தை இந்தப் போரின் உண்மையான போர்க்களமாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கை
அமெரிக்க பொருளாதாரத் துறைச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) கரன்சி ஸ்வாப் லைன் வழங்கும் யோசனையை ஆதரித்துள்ளார். ஈரான் போர் காரணமாக எண்ணெய் உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகள் டாலர் தேவையை எதிர்கொள்கின்றன. ஸ்வாப் லைன் மூலம் அமெரிக்க சொத்துகளின் ஒழுங்கற்ற விற்பனையைத் தடுக்க முடியும் என்று அவர் செனட் குழு முன்பு தெரிவித்தார்.
இதன் மூலம் கீதா கோபிநாத் முதல் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் சொல்வது உறுதியானது.
உலகப் பொருளாதாரத்துக்கு என்ன பாதிப்பு?
ஈரான் மோதல் தொடர்ந்தால், ஹார்முஸ் நீரிணைப்பு வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தும். பல நாடுகள் அமெரிக்க சொத்துகளை விற்க முயன்றால் சந்தை குழப்பம் ஏற்படும். எனவே அமெரிக்கா ஸ்வாப் லைன் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறது.
இந்த நிலைமை இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் பாதிக்கும். எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்கும். இறக்குமதி செலவு அதிகரிக்கும். சாதாரண மக்களுக்கு பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது அமெரிக்கா தொடர்ந்து போரை நடத்தும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்க பொருளாதாரம், முதலீட்டு சந்தை வீழ்ந்தால் டிரம்ப் போர் நிறுத்தம் மற்றும் எண்ணெய் போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையை துரித்தப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் கரன்சி ஸ்வாப் லைன் மூலம் போர் நிறுத்தத்தை காலம் தாழ்த்த முடியும்.












Click it and Unblock the Notifications