ஈரான் போரில் ட்விஸ்ட்.. இரவோடு இரவாக பாகிஸ்தானுக்கு கிளம்பும் ஈரான் தலைவர்.. திடீர் பயணம் ஏன்?
இஸ்லாமாபாத்: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சிறிய குழுவுடன் வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். அராக்சி-யின் பாகிஸ்தான் பயணம் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கியமான படியாக கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்த முடிவுகள் இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகள் அல் ஜசீரா செய்தியாளர்களிடம் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். வெள்ளிக்கிழமை அராக்சி பாகிஸ்தான் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பல உரையாடல்களை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் இப்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைக்கான முக்கிய மையமாக மாறியுள்ளது. அராக்சி தலைமையிலான சிறிய குழு வெள்ளிக்கிழமை இரவு ஈரானில் இருந்து கிளம்பி பாகிஸ்தானுக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி
இந்த புதிய முயற்சிக்கு முன் பல சிக்கல்கள் இருந்தன. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் தலைமையிலான குழு இந்த வார தொடக்கத்தில் இஸ்லாமாபாத் வருவதாக இருந்தது. ஆனால் ஈரான் தரப்பு தனது துறைமுகங்களுக்கு அமெரிக்கா விதித்த கடற்படைத் தடையை நீக்காத காரணத்தால் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த முடிவும் இல்லாமல் முடிவடைந்த நிலையில் 2 நாட்களுக்கு பின்பு ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ்-ல் அமெரிக்க கடற்படை கொண்டு தடையை அமல்படுத்தினார்.
இந்த நிலையில் 2வது கட்ட பேச்சுவார்த்தையின் போது ஈரான் தரப்பு தடையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என்று வலியுறுத்தியது. ஆனால் டிரம்ப் கடற்படை முடக்கத்தை நீக்க மறுத்தார். இதனால் பேச்சுவார்த்தை வாய்ப்பு தற்காலிகமாக தடைபட்டிருந்தது. ஈரான் மார்ச் மாதம் முதல் ஹார்முஸ் நீரிணைப்பில் பெரும்பாலான கப்பல்களுக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இறங்கியதும் ஈரான் கப்பல்களுக்கும் செல்ல தடை உருவானது.
இவை அனைத்தும் வெள்ளிக்கிழமை காலையில் மாறியது.
வெள்ளிக்கிழமை காலை அராக்சி பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினார். ஈரான் அரசு செய்தி நிறுவனம் அராக்சி மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் இடையேயும் உரையாடல் நடைபெற்றதாக தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தான் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஒருவர் அல் ஜசீராவிடம் பேசியபோது, "அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி திரும்ப அதிகப்படியான வாய்ப்பு உள்ளது" என்று கூறினார். பல நாட்களாக அதிகரித்து வந்த பதற்றத்துக்குப் பின்னர் இந்த நம்பிக்கை மீண்டும் எழுந்துள்ளது. இருப்பினும் அமெரிக்கா தரப்பு இன்னும் பாகிஸ்தானுக்கு புதிய குழு அனுப்புவது குறித்து உறுதிப்படுத்தவில்லை.
ஹார்முஸ் நீரிணைப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையாக உள்ளது. இங்கு ஏற்படும் சிறிய இடையூறும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் வேளையில் கிடைத்தட்ட 55 நாட்களாக மொத்த பாதையும் முடங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது உலக நாடுகளுக்கு பெரிய நிம்மதியை அளிக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications