மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா.. முகேஷ் அம்பானியின் புது பிஸ்னஸ்.. இதுவேற ரகம்!
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய நிதிச் சேவை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், இந்தியாவின் காப்பீட்டு சந்தையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு அலையன்ஸ் ஐரோப்பாவுடன் (Allianz Europe) 50:50 என்ற பங்கீடு உடன் கூட்டு நிறுவனத்தை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தொடங்கி பொதுக் காப்பீட்டு துறையில் நுழைய உள்ளது. இந்தியாவில் "முழுமையான நிதிச் சேவை தளம்" உருவாக்கும் முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய கனவு திட்டத்தின் முக்கிய கட்டமாக இதை பார்க்கப்படுகிறது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அலையன்ஸ் ஐரோப்பாவுடன் இணைந்து கூட்டணி நிறுவனத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இரு நிறுவனங்களும் சமமான பங்குடன் (50:50) இந்தியாவில் பொதுக் காப்பீட்டு (General Insurance) துறையில் தனி நிறுவனத்தை தொடங்கி வர்த்தகத்தில் இறங்க உள்ளது. இது ஜியோவின் முழுமையான நிதிச் சேவை தளத்தை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஜூலை 2025-ல் இரு நிறுவனங்களும் பொதுக் காப்பீடு மற்றும் லைப் இன்சூரன்ஸ் துறையில் சமமான பங்குடன் கூட்டணி நிறுவனத்தை தொடங்க முன்னதாக திட்டமிட்டு இருந்தது. தற்போது பொதுக் காப்பீட்டுக்கு மட்டும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தனி ஒப்பந்தம் விரைவில் வரும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
பொது காப்பீட்டுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி நிறுவனம் அனைத்து அரசு மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற்ற பிறகு செயல்படத் தொடங்கும். தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள், பொதுக் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் வழங்கும்.
இரு நிறுவனங்களும் ஏற்கனவே மறுகாப்பீட்டு (ரீ-இன்சூரன்ஸ்) துறையில் செயல்படத் தொடங்கியுள்ளன. இப்போது பொதுக் காப்பீட்டு கூட்டு நிறுவனம் உருவாகியுள்ள நிலையில், அடுத்தாக லைப் இன்சூரன்ஸ் துறையிலும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications