விஜய்க்கு முதல் நெருக்கடி.. ஆதரவு தந்தாலும் இதையெல்லாம் ஏற்க முடியாது! எதிர்க்கும் கூட்டணி கட்சிகள்!
சென்னை: ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலை தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில், இதைப் பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகிறார்கள். இன்று சட்டசபையிலேயே கூட இந்த விவகாரம் எதிரொலித்தது. விஜய் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் கூட பல கட்சிகள் இந்த நியமனத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், இன்று சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயாராகி வரும் வேளையில், அவரது அரசின் நியமனம் கட்சிகளிடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது தனிப்பட்ட ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலை தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக விஜய் நியமித்திருப்பதுதான் இப்போது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

பதவியேற்ற சில நாட்களிலேயே அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது என விஜய் தரப்பில் இருந்து வரிசையாகப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே பொதுவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ அல்லது துறை சார்ந்த வல்லுநர்களோ நியமிக்கப்படும் சிறப்பு அதிகாரி பதவிக்கு, ஒரு ஜோதிடரை விஜய் கொண்டு வந்திருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த முடிவுக்கு ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. ஏற்கனவே இந்த முடிவுக்கு அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளான இடதுசாரிகள், விசிக கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இதற்கிடையே இன்று சட்டசபையிலும் இது தொடர்பாகக் கட்சிகள் கேள்வி எழுப்பின. விசிக மற்றும் இடதுசாரிகள் அவையில் இது தொடர்பாகப் பேசவில்லை என்ற போதிலும், மதிமுக மற்றும் தமிமுன் அன்சாரி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
முதலில் பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், ஜோசியர் ரத்தன் பண்டித் நியமனத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், "ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல ஜோதிடருக்கு பதவி தரப்பட்டதற்கு தவெக அரசுக்கு மஜக எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்தார். ஜோதிடத்தை நம்புவது என்பது தனிப்பட்ட நம்பிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும் ஜோதிடத்தை அரசு மயமாக்குவதை ஏற்க முடியாது என்றும் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்தார்
நிர்வாக ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டிய இடத்திற்கு ஜோதிடரை நியமித்திருப்பது ரொம்பவே தவறான ஒரு செயல் என்று விஜய் தரப்பை விமர்சிக்கிறார்கள். அதாவது விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தாலும் கூட ஜோதிடர் நியமனத்தை ஆதரிக்க முடியாது என்பதே இவர்கள் நிலைப்பாடாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications