ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. கேரளா செல்லும் திட்டத்தை தள்ளி வைத்த ஆளுநர்.. விஜய் பதவியேற்பு எப்போது?
சென்னை: தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்குமா இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் ஆதரவு கிடைத்துள்ளது. 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தாலும் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அர்லேகர் இங்கு இருக்கமாட்டார் எனத் தெரிகிறது. இன்று இரவு தமிழக பொறுப்பு ஆளுநர் கேரளாவுக்கு பயணமாக உள்ளதால் பதவியேற்பு மேலும் தாமதம் ஆகும் என தெரிகிறது.
தவெகவிற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் அர்லேகர் உறுதியாக உள்ளார். இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக கடுமையாக போராடியது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவை நேற்றே அளித்துவிட்டன.

காங்கிரஸ் ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை விஜய்க்கு அளித்துள்ளது. இதனால் தவெகவின் 107 + 5 + 4 என மொத்தம் 116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது. பெரும்பான்மைக்கு மீதம் தேவைப்பட்ட 2 எம்எல்ஏக்கள் ஆதரவை பெற விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி வந்தது.
இந்நிலையில், விசிகவும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. விசிக, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ளது. திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை பெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. விசிக அளித்துள்ள கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் ஆதரவு கோர இருக்கிறார்.
முன்னதாக நேற்றைய தினம் விஜய் ஆளுநரிடம் ஆதரவு கடிதம் கொடுத்ததில் சிக்கல் ஏற்பட்டது. அமமுக எம்எல்ஏ பெயரில் தவெக கொடுத்த கடிதம் போலி என சர்ச்சை எழுந்துள்ளது. அதனால் ஆதரவு அளிக்கும் கட்சி குறித்து ஆளுநர் மாளிகை விசாரணை நடத்தி அதன் பின்னர் ஆட்சிக்கு அழைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணியளவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்கிறார் எனக் கூறப்பட்டது. ஆளுநர் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுத்தான் கேரளா செல்லாமல் காத்திருந்தார் ஆளுநர்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான அர்லேகர், கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ளார். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரளாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநர் அர்லேகர் கேரளா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
விஜய், ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரைச் சந்திக்க சென்றுகொண்டிருந்த நிலையில் ஆளுநர் அர்லேகர், நேரம் தராததால் யூ-டர்ன் போட்டு திரும்பினார் விஜய். இந்நிலையில், ஆளுநர் கேரள பயணத்தை ரத்து செய்துவிட்டு விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்கியதால் மீண்டும் யூ-டர்ன் போட்டு ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்று வருகிறார்.
தமிழகத்தில் தவெகவுக்கு மெஜாரிட்டி கிடைத்தாலும் ஆட்சி அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து தாமதங்கள், குழப்பங்கள் காரணமாக விஜய் கடும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. "ச. ஜோசப் விஜய் எனும் நான்".. எனக் கூறி விஜய் முதல்வராக எப்போது பதவியேற்பார் என தவெகவினர் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications