‛சாட்' முழுவதும் ஆபாசம்.. கல்லூரி மாணவனை நம்பி ஹோட்டலுக்கு போன 19 வயது இளம்பெண் பலாத்காரம்
அமராவதி: ஆன்லைனில் 10 நாட்களுக்கு முன்பு பழக்கமான 19 வயது இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற 22 வயது கல்லூரி மாணவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கல்லூரி மாணவரின் செல்போனை போலீசார் கைப்பற்றி பார்த்தபோது அவர் இன்ஸ்டாகிராமில் தன்னை விட வயது குறைவான பெண்களை குறிவைத்து நட்பாகி ஆபாசமாக மெசேஜ் அனுப்பி உரையாடிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி புறநகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டார். இளம்பெண் சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அந்த பெண்ணுக்கும், 22 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் அந்த இளைஞர் கடப்பா மாவட்டம் கபத்வால் பகுதியை சேர்ந்தவர். 2ம் ஆண்டு கல்லூரி படிப்பை படித்து வருகிறார்.
இந்நிலையில் தான் அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்தனர். அப்போது அந்த இளம்பெண்ணை சந்திக்க கல்லூரி மாணவர் விரும்பினார். இதையடுத்து அவர் அந்த இளம்பெண்ணை தன்னை சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்தார். கல்லூரி மாணவனை நம்பிய அந்த இளம்பெண் கடந்த 23ம் தேதி அவரை சந்திக்க தனியாக சென்றார். மாலை நேரத்தில் இருவரும் சந்தித்தனர்.
அப்போது கல்லூரி மாணவர், அந்த இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்தார். ஆனால் அவர் ஹோட்டலுக்கு முதலில் செல்ல மறுத்தார். இருப்பினும் விடாத கல்லூரி மாணவர் கட்டாயப்படுத்தி அவரை ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், அந்த கல்லூரி மாணவரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியேறினார். அதன்பிறகு சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி அழுதார். அவரது தாய் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த ஹோட்டல் அறைக்கு சென்று முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கல்லூரி மாணவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.இதுபற்றி அலிபிரி சர்க்கிள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் கிஷோர் கூறியதாவது:
‛‛குற்றம்சாட்டப்பட்ட நபரின் செல்போனை ஆய்வு செய்துள்ளோம்.அப்போது அவர் தன்னை விட குறைந்த வயது கொண்ட பெண்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். பலரிடம் ஆபாசமாக ‛சாட்' செய்துள்ளார். இதனால் இந்த பெண்ணை போல் வேறு யாராவது பாதிக்கப்பட்டனரா? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications