வாக்கு எண்ணிக்கை இருக்கட்டும்.. இவ்வளவு பிரச்சனை இருக்கு.. எப்படி சமாளிக்கப்போறாங்க?!
அசாம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி அதன் முடிவுகள் மாலை வெளியாக உள்ள நிலையில், எக்சிட் போல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால் அசாம்-ல் யார் ஆட்சி அமைத்தாலும் பல முக்கிய பிரச்சனைகளை கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அசாம் மாநிலத்தில் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் மாநில மக்களின் குறைந்த சராசரி வருமானம், குறைந்த மனித வளர்ச்சி குறியீடு, அதிக பொது கடன், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, மக்கள் வெளியேற்றம், பலவீனமான விவசாயம் ஆகியவை புதிய அரசுக்கு சவாலாக இருக்கும்.

அதிக பொருளாதார வளர்ச்சி
அசாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. 2024-25-ல் மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ரூ.6.4 லட்சம் கோடியாக உள்ளது, இதன் மூலம் இந்தியாவில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த வளர்ச்சி அடிப்படை விளைவு (base effect) காரணமாக அதிகமாகத் தெரிவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது அசாம் மாநிலம் குறைந்த அளவில் இருந்கு வளர்ச்சி அடைந்துள்ளதால் சிறிய அதிகரிப்பு கூட அதிகப்படியான வளர்ச்சியாகக் காட்டப்படுகிறது.
மனித வளர்ச்சி குறியீடு குறைவு
அசாம் மனித வளர்ச்சி குறியீடு (HDI) 2023-24-ல் 0.65 ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 0.68-ஐ விட குறைவானது. அதிகப்படியான வளர்ச்சி இருந்தாலும் இந்த வளர்ச்சி மக்களின் அடிமட்டத்தை எட்டுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பொருளாதார நிபுணர் தேபர்ஷி தாஸ் கூறுகையில், வளர்ச்சி சமமாகப் பகிரப்படவில்லை என்பதை HDI காட்டுகிறது என்றார்.
குறைந்த தனிநபர் வருமானம்
2024-25-ல் அசாம் தனிநபர் வருமானம் (PCI) ரூ.1.77 லட்சமாக உள்ளது. இது இது தற்போது தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் மிகக் குறைவானது. தமிழ்நாடு (ரூ.4.04 லட்சம்), கேரளா (ரூ.3.46 லட்சம்), புதுச்சேரி (ரூ.3.06 லட்சம்), மேற்கு வங்கம் (ரூ.1.82 லட்சம்) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது அசாம் மிகவும் பின்தங்கியுள்ளது. இது பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைவாக உள்ளதை காட்டுகிறது.
அதிக பொது கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறை
2025-26-ன் இறுதியில் அசாம் பொது கடன் ரூ.2.06 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20-ல் ஜிடிபி அடிப்படையில் 21.2 சதவீதமாக இருந்த கடன் விகிதம் 2025-26-ல் 27.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2024-25-ல் நிதிப்பற்றாக்குறை GSDP-யின் 5.6 சதவீதமாக உள்ளது. இது புதிய அரசுக்கு நிதி நிர்வாகத்திற்கு பெரும் சவாலா இருக்கும்.
வேலைவாய்ப்பு பற்றாக்குறை
அசாம் வேலையின்மை விகிதம் 2025-26-ல் 4 சதவீதமாக உள்ளது. ஆனால் மாநிலத்திலிருந்து பலர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர். பலர் விரும்பிய வேலைகள் கிடைக்காததால் குறைந்த ஊதியம் தரும் தற்காலிக வேலைகளை ஏற்க வேண்டிய நிலை உள்ளது. இது வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. விவசாய பொருளாதாரத்தின் பலவீனமும் இதற்கு காரணமாகும்.
விவசாயம் பலவீனம்
அசாம் விவசாய மாநிலமாக அறியப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயம் மற்றும் தொடர்புடைய துறைகள் கடந்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 3.2 சதவீத வளர்ச்சியை மட்டுமே காட்டியுள்ளன.
இது அம்மாநில GSDP-யில் 25 சதவீதத்திற்கும் குறைவாக பங்களிக்கிறது. விவசாயம் பெரும்பாலும் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வணிக விவசாயம் குறைவு. சந்தை ஒழுங்குபடுத்தப்படாத நிலை உள்ளது.
செயல்பாட்டுக்கு வராத முதலீடுகள் அதிகரிப்பு
அசாம் மாநிலத்தில் 2023-24-ல் ரூ.32,500 கோடியாக இருந்த முதலீட்டு அளவு 2024-25-ல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்த Advantage Assam 2.0 திட்டங்களில் ரூ.1.78 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்ளன. ஜகிரோடில் ரூ.27,000 கோடி செமிகண்டக்டர் தொழிற்சாலை, மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் பல திட்டங்கள் சுற்றுச்சூழல் விதிமீறல், பழங்குடி மக்கள் இடமாற்றம், விவசாய நிலம் சேதம் போன்ற காரணங்களால் நீதிமன்ற தடை அல்லது போராட்டங்களை எதிர்கொள்கின்றன. இதனால் செயல்பாட்டுக்கு வராத முதலீட்டு திட்டங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 10 வருடத்தில் பாஜக ஆட்சி செய்தாலும் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் பொருளாதார வளர்ச்சியின் பலன் கிடைக்கவில்லை, இன்னும் மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். பல முதலீட்டு திட்டங்கள் செயல்பாடல் முடங்கியுள்ளது.
அசாம் தற்போது பேப்பரில் சிறப்பான மாநிலமாக தோன்றினாலும் அம்மாநில மக்களின் நிலை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வளரவில்லை என்பது தெரிகிறது. இதனால் புதிய ஆட்சி அமைப்பது யாராக இருந்தாலும் இந்தப் பொருளாதார சிக்கல்களை சமாளித்து வளர்ச்சியை மக்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய தேர்தல் முடிவுகள் அசாம்-ன் பொருளாதார பயணத்தின் திசையை தீர்மானிக்கும்.













Click it and Unblock the Notifications