இரவு 12.30 மணிக்கு எப்படி வெளியே வந்தார்? மருத்துவ கல்லூரி பலாத்கார வழக்கில் மம்தா கருத்தால் சர்ச்சை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‛‛இரவு 12.30 மணிக்கு அந்த மாணவி எப்படி வெளியே வந்தார்? இந்த விஷயத்தில் அரசை இழுத்து விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. அந்த மாணவியின் பாதுகாப்பிற்கு தனியார் மருத்துவ கல்லூரி தான் பொறுப்பு. குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வர அனுமதிக்க கூடாது. பெண்கள் தங்களை தானே பாதுகாத்து கொள்ள வேண்டும்'' என கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறார். கொல்கத்தாவில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் துர்காபூர் என்ற இடம் உள்ளது.

துர்காபூரில் தனியார் மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 23 வயது நிரம்பிய பெண் ஒருவர் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படிப்பை படித்து வருகிறார்.
இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவியை ஒரு கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கதறியழுதபடி கூறினார். இதையடுத்து அவர்கள் ஒடிசாவில் இருந்து துர்காபூர் சென்றனர். அதன்பிறகு நியூ டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதற்கிடையே மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். தற்போது மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதால் மம்தா பானர்ஜி அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருந்தார். கருத்து எதையும் அவர் கூறவில்லை. இதனை எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பாக பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தான் மம்தா பானர்ஜி அந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் இரவு 12.30 மணிக்கு அந்த மாணவி எப்படி வெளியே வந்தார்? இந்த விஷயத்தில் அரசை இழுத்து விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. அந்த மாணவியின் பாதுகாப்பிற்கு தனியார் மருத்துவ கல்லூரி தான் பொறுப்பு.
குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் வெளியே அனுமதிக்க கூடாது. பெண்கள் தங்களை தானே பாதுகாத்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பலாத்கார குற்றத்துக்கும் மாநில அரசை கைகாட்டுகின்றனர். ஒடிசாவின் பூரி பீச்சில் ஒரு மாதத்துக்கு முன்பு கூட்டு பலாத்காரம் நடந்தது. அதற்கு ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?'' என கேள்வி எழுப்பி உள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்து தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதனையும் எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தார், ‛‛மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதற்கான பொறுப்பில் இருந்து முதலமைச்சர் தப்பிக்க முடியாது. அவரது கருத்து அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. இப்போதும் கூட அவர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது தான் பழியை போடுகிறார்'' என்று சாடியுள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவி தற்போது ஒடிசாவுக்கு தனது பெற்றோருடன் சென்றுவிட்டார். இதுபற்றி மாணவியின் தந்தை கூறுகையில், ‛‛அவர்கள் எனது மகளை எப்போது வேண்டுமானாலும் கொல்லலாம். நம்பிக்கை என்பது எங்களிடம் இல்லை. இதனால் மேற்கு வங்கத்தில் மகள் இருப்பது பாதுகாப்பானதாக இருக்காது என நினைக்கிறோம். எனவே மகளை ஒடிசாவுக்கு அழைத்து வந்துவிட்டோம். என் மகள் மிகுந்த வலியில் உள்ளார். அவரால் நடக்க கூட முடியவில்லை. தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார்'' என்றார்.












Click it and Unblock the Notifications