ஹிஜாப்பை எப்படி அகற்றலாம்? நிதிஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் தாதா.. உச்சக்கட்ட பதற்றம்
பாட்னா: பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முஸ்லீம் பெண் ஒருவரின் ஹிஜாப்பை நிதிஷ் குமார் அகற்றினார். பொது இடத்தில் நிதிஷ் இதுபோல நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு தரப்பினரும் நிதிஷின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நிதஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அசம்பாவிதம் நடந்துவிடும் என பாகிஸ்தான் நிழலுலகத் தாதா மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பீகாரில் கடந்த மாதம் தான் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பாஜக- ஜேடியு கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. நிதிஷ்குமார் 10வது முறையாக அங்கு முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அதேநேரம் நிதிஷ்குமாரின் செயல்கள் கடந்த சில காலமாகவே அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இப்போதும் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.

ஹிஜாப்
அதாவது நேற்று முன்தினம் பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதிஷ் குமார் பெண் மருத்துவர் ஒருவருக்குப் பணி நியமன ஆணையை வழங்கினார். அப்போது அந்தப் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை நிதிஷ் அகற்றினார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷின் இந்தச் செயலுக்குக் காங்கிரஸ், ஆர்ஜேடி எனத் தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த நிழல் உலக தாதா ஒருவர் நிதிஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சொல்லியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நிழல் உலக தாதாவாக அறியப்படும் ஷாசாத் பட்டி என்பவர்தான் இப்படிச் சொல்லி இருக்கிறார். உயர் பதவியில் இருக்கும் ஒருவர், பொது நிகழ்ச்சியில் முஸ்லிம் பெண்ணிடம் இப்படி நடந்துகொள்ளலாமா என ஷாசாத் பட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொலை மிரட்டல்
மேலும், நிதிஷ் குமார் உடனடியாகத் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஷாசாத், அவருக்கு நடக்கக்கூடாத சம்பவம் எதாவது நடந்துவிட்டால் தன்னை குறை சொல்லக்கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் தாதா ஒருவர் இந்தியாவில் முதல்வராக இருக்கும் ஒருவருக்கு இதுபோல மிரட்டல் விடுத்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
யார் இவர்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஷாசாத், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கூறி வருகிறார்.. உள்ளூர் தாதாவாக இருக்கும் ஷாசத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.. தன்னை பாகிஸ்தானின் உண்மை வீரர் என்று சொல்லிக் கொள்ளும் ஷாசாத், தன் எப்போதும் இஸ்லாமிய சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர் என்றும் கூறிக்கொள்கிறார்.
அப்படிப்பட்ட ஒருவர் பீகார் முதல்வருக்கு மிரட்டல் விடுத்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேநேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக பீகார் காவல் துறையினர் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மத்திய அரசும் தலையிட வேண்டும் என நிதிஷ் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
என்ன நடந்தது
பாட்னாவில் ஆயூஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவில் தான் இந்தச் சம்பவம் நடந்தது.. அப்போது நிதிஷ் குமார் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை அகற்றினார். அப்போது நிதிஷ் குமார் டாக்டர் நுஸ்ரத் பர்வீன் என்ற பெண்ணுக்குப் பணிநியமனக் கடிதம் வழங்கினார். பர்வீன் ஹிஜாப் அணிந்திருந்ததைக் கவனித்த முதல்வர் நிதிஷ், "இது என்ன?" எனக் கேட்டார். அந்தப் பெண் ஹிஜாப் எனச் சொன்னதும் அதை அகற்றச் சொன்னார். அத்தோடு நிற்காமல் நிதிஷே அந்தப் பெண்ணின் ஹிஜாப்பை அகற்றினார். அருகே இருந்த பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி கூட, முதல்வரை தடுக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications