ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!
தெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்துக்கு பிறகும் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தனது கட்டுப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. ஹார்முஸ் வழியாக செல்ல முயன்ற ஒரு கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் மீண்டும் வளைகுடா கடலுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உலக எண்ணெய் சந்தையில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்மூஸ் பாதையை முழுமையாக திறக்கப்பட வேண்டும், இதேபோல் இவ்வழியாக செல்லும் கப்பல்கள் ஈரானுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஈரான் மீண்டும் கப்பல்கள் ஹார்மூஸ் பாதையில் கடப்பதற்கு தடை விதித்து வருகிறது.

ஈரான் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள்
ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தம் கீழ் ஹார்முஸ் நீரிணையில் தினமும் 12 கப்பல்கள் மட்டுமே கடக்க அனுமதிக்கும் என்றும், அதற்கு கட்டணம் (டோல்) விதிக்கும் என்றும் மத்தியஸ்தர் நாடான பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. இது டிரம்ப் அறிவித்த முழுமையான திறப்பு என்ற கோரிக்கைக்கு முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.
நேற்று காலை அறிவித்த போர் நிறுத்தம் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் ஹார்முஸ் வழியாக வெறும் 4 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன. இது ஏப்ரல் மாதத்தில் இதுவரை பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
எண்ணெய் விலை உயர்வு
ஈரானின் இப்புதிய நிலைப்பாடு காரணமாக அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 97 டாலருக்கு உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் பதிவான குறைந்தபட்ச விலையில் இருந்து சுமார் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் விலை 95 டாலர் அளவில் நிலையாக உள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்புகள் தொடரும் அபாயம் இருப்பதால் விலை உயர்வும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதாரம்
ஹார்முஸ் நீரிணை உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பாதையாகும். இங்கு உருவாகும் கட்டுப்பாடுகள் உலக அளவில் எண்ணெய் விலையை உயர்த்தும் என்பதை கடந்த 6-7 வாரங்களாக பார்த்து வரும் வேளையில் மீண்டும் ஈரான் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை கடுமையாக்கி வருகிறது.
இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
அமெரிக்கா - ஈரான் இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட 15 நாள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தொடரும் கட்டுப்பாடு உலக சந்தையில் புதிய நிச்சயமற்ற தன்மைக்கு தள்ளியுள்ளது என்பது தான் தற்போதைய கள நிலவரம்.












Click it and Unblock the Notifications