அவசரப்பட்டு மாத்தி ஓட்டு போட்டுட்டோமே! சென்னை டூ கன்னியாகுமரி வரை திமுகவை குஷிப்படுத்திய அந்த 'லீக்'
சென்னை: "எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சு, நம்ம ஒரு ஓட்டு போடலனா என்ன ஆகிடும்னு தெரியாம மாத்தி போட்டுட்டோம்" என தேர்தல் தோல்விக்குப் பின் மக்கள் சமூக ஊடகங்களில் புலம்பி வருவதாக திமுக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்படி ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வச்சிட்டோமே எனப் பலரும் வருந்திப் பதிவு போடுவதை பார்ப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுதான் தங்களின் ஐந்தாண்டு கால நல்லாட்சிக்குக் கிடைத்த உண்மையான அங்கீகாரம் என திமுகவினர் பெருமிதம் கொள்கிறார்கள்.
தமிழக தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த அரசியல் கணக்குகளையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளன. கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த திமுக, மிக எளிதாக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்றுதான் பெரும்பாலானோர் கணித்திருந்தனர்.

தேர்தல் தந்த விநோத நிஜம்
200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தொண்டர்களும் நிர்வாகிகளும் நம்பினார்கள்.. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது அது திமுகவினருக்குப் பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியதை கட்சியின் அடிமட்டத் தொண்டர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தோல்விக்குப் பிறகு, திமுக அதிமுகவுடன் ரகசியக் கூட்டணி வைக்கப் போகிறது என்றும், புதிய அரசு அமைவதற்குப் பின்னால் இருந்து உதவப் போகிறது என்றும் வதந்திகள் கிளம்பின. இத்தகைய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்பதாக ஸ்டாலின் அறிவித்தார். மேலும், கட்சியில் அதிரடியான சில மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், இனிவரும் காலங்களில் மக்கள் செல்வாக்குமிக்க எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய 36 பேர் கொண்ட கள ஆய்வு குழு ஒன்றையும் ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாகச் சென்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு, வரும் ஜூன் முதல் வாரத்திற்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில்தான், தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது தேர்தல் முடிந்து புதிய அரசு அமையவுள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் வாக்காளர்கள் மத்தியில் ஒரு விநோதமான ட்ரெண்ட் அரங்கேறி வருகிறது.
ஸ்டாலின் கொளத்தூர் தோல்வி
"எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம், அதனால நம்மளோட ஒரு ஓட்டுனால என்ன ஆகப்போகுதுன்னு தெரியாம மாத்தி ஓட்டு போட்டுட்டோம், இல்லன்னா ஓட்டே போடாம விட்டுட்டோம்" என்று பொதுமக்கள் பலரும் இப்போது சமூக வலைத்தளங்களில் ஓப்பனாக புலம்பத் தொடங்கியுள்ளார்களாம்.
அதுமட்டுமில்லாமல், "அவசரப்பட்டு இப்படி ஒரு மாற்றுத் தரப்புக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் உட்கார வச்சிட்டோமே" எனப் பலரும் தங்களின் ஃபேஸ்புக், எக்ஸ் தளப் பக்கங்களில் வருந்தி பதிவுகளை போட்டு வருகிறார்களாம்.. தோற்றுப் போனாலும் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் இந்த அனுதாப அலையைத்தான், தங்களின் ஐந்தாண்டு கால நல்லாட்சிக்குக் கிடைத்த உண்மையான அங்கீகாரம் என்று திமுகவினர் தற்போது சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
திமுக தோல்வி
எனினும் தேர்தல் களம் எப்போதுமே நம்மால் கணிக்க முடியாத ஒன்று. ஒரு அரசு 5 ஆண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், "அவர்கள் எப்படியும் ஜெயித்துவிடுவார்கள்" என்ற பொதுமக்களின் ஓவர் கான்ஃபிடன்ஸ்தான் சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக முடிந்துவிடுகிறது.
வாக்காளர்களின் இந்த அஜாக்கிரதை மனப்போக்குதான் பல தொகுதிகளில் திமுகவின் வாக்கு சதவீதத்தைக் குறைத்து, தோல்விக்கு வழிவகுத்திருக்கிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும் முன்பே, மக்கள் தாங்கள் எடுத்த முடிவை நினைத்து இப்படிப் பகிரங்கமாக வருத்தப்படுவதும் புலம்புவதும் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழலாகும்.
மாவட்ட செயலாளர்கள்
அதேசமயம் இந்த தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், உடனடியாக மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி தோல்விக்குத் தானே பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை அவரது அரசியல் பக்குவத்தைக் காட்டுகிறது.
ஆட்சியை இழந்திருந்தாலும், தொகுதிப் பக்கம் போன ஸ்டாலினைக் கண்டு மக்கள் கண்ணீர் விட்டதும், சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பதிவிடும் வருத்தங்களும் திமுகவிற்கான மக்கள் ஆதரவு இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.
ஆர் எஸ் பாரதி அட்டாக்
மக்களுக்கான பணியைத் தொடர்ந்து செய்யப் போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், புதிய அரசை விமர்சித்துப் பேசியுள்ள திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, "இனி அனைத்திற்கும் புதிய முதலமைச்சர் அவகாசம் மட்டுமே கேட்பார்" என்று நேரடியாகவே அட்டாக் செய்துள்ளார்.
எது எப்படியாயினும், மக்கள் தற்போது வெளிப்படுத்தி வரும் இந்தத் திடீர் அனுதாப அலையையும், அமைக்கப்பட்டுள்ள 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவின் அறிக்கையையும் திமுக தலைமை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதில்தான் அதன் அடுத்தகட்ட நகர்வு அடங்கியிருக்கிறது. தேர்தல் பின்னடைவைச் சரியாக புரிந்து கொண்டு, அடிமட்டத் தவறுகளைச் சரிசெய்து, மக்கள் மத்தியில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவதே தற்போதைய சூழலில் திமுகவிற்கான வழி... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications