"பேரழிவு நிச்சயம்.." நேரடியாகவே எச்சரித்த புதின்.. ஒரு நொடி ஸ்டன் ஆன டிரம்ப்! என்ன நடந்தது
மாஸ்கோ: வளைகுடாவில் போர் பதற்றம் தொடரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற 90 நிமிடத் தொலைப்பேசி உரையாடல், சர்வதேச அரசியலில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு போர் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் இதில் விரிவாக விவாதித்துள்ளனர்.
இப்போது சர்வதேச அளவில் ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும் ஈரானும் மோதிக் கொள்கிறது. இரு நாடுகளும் நேரடியாகப் போரிடுவது நின்றுவிட்டாலும் கூட முழுமையான அமைதி திரும்பவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் சண்டை வெடிக்கும் என்ற ஒரு சூழலே இருக்கிறது. இது சர்வதேச அளவில் பதற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

பேச்சு
இதற்கிடையே ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு வல்லரசு நாடுகளின் தலைவர்களும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முக்கியமான உரையாடலை நடத்தியுள்ளனர். கிரெம்ளின் மாளிகையின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த உரையாடல் நேர்மையாகவும் விரிவாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இப்போது இந்த உரையாடல் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேரடி எச்சரிக்கை
இந்த உரையாடலில் ஈரான் மற்றும் பெர்சிய வளைகுடா பகுதிகளில் நிலவும் பதற்றம் குறித்துப் பேசப்பட்டது. ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிக்க ட்ரம்ப் எடுத்த முடிவை புதின் வரவேற்றுள்ளார். இது பேச்சுவார்த்தைக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்கும் என அவர் கருதுகிறார். அதே சமயம், அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் ராணுவ நடவடிக்கையில் இறங்கினால், அது ஈரானுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் எனப் புதின் நேரடியாகவே எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போர்
இன்னொரு பக்கம் ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் தீவிரமாக விவாதித்துள்ளனர். மே 9ஆம் தேதி ரஷ்யா கொண்டாடும் 'வெற்றி தின' கொண்டாட்டங்களை முன்னிட்டு, அந்தச் சமயத்தில் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அமல்படுத்தத் தான் தயாராக இருப்பதாகப் புதின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுக்கு எதிராகப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் இந்த வெற்றி தின நாளை, இரு நாடுகளும் பகிர்ந்துகொண்ட வெற்றி தினமாக ட்ரம்ப் குறிப்பிட்டு இந்தப் போர்நிறுத்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிருப்தி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் செயல்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் தூண்டுதலால் இந்தப் போரை ஜெலன்ஸ்கி அரசு நீட்டித்து வருவதாக இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்கா என்ன தான் உக்ரைனுக்கு உதவினாலும் கூட, அதன் செயல்பாடுகளில் நீண்ட காலமாகவே அதிருப்தியில் தான் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைச் சொல்வதை மட்டுமே உக்ரைன் கேட்பதாகவும் தங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்றும் அமெரிக்கா அதிருப்தியில் இருக்கிறது. அதுவே தான் இந்த போன் காலிலும் வெளிப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பதற்றம் தொடரும் நிலையில், இரு நாட்டுத் தலைவர்களின் இந்த உரையாடல் கவனம் பெற்றுள்ளது. வளைகுடா மோதல், உக்ரைன் போர் என இரண்டுமே முடிவுக்கு வந்தால் மட்டுமே உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பும் என்பதில் சந்தேகமே இல்லை!












Click it and Unblock the Notifications