ஊட்டி: கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த ஊட்டி தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர். சயானின் மனைவி மற்றும் மகள் மரணம் குறித்து விசாரிக்க ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.
கோடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வழக்கில் தற்போது 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு வழக்கில் ஏற்கனவே சயான், மனோஜ் உள்ளிட்டோர் முக்கியமான வாக்குமூலங்களை கொடுத்துள்ளனர்.
இதில் மேல்விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. புதிய சாட்சியங்களிடம் போலீசார் வாக்குமூலங்களை பெற்று வருகிறார்கள்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களில் முக்கியமான சாட்சியமாக சயான் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த வழக்கில் வாக்குமூலம் கொடுத்து திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தே நடந்ததாக போலீசார் விசாரணையில் இவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. கனகராஜ் மரணம் குறித்தும், கனகராஜ் எடப்பாடி பழனிசாமி இடையில் நடந்த உரையாடல் குறித்தும் சயான் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியிலேயே கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து முதல் ஆளாக சயான்தான் வெளியே வந்து பேட்டி கொடுத்தார். அப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேட்டியில் சயான் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். கடந்த 2017ல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து சில நாட்களில் சயானின் மனைவி மற்றும் மகன் விபத்தில் மரணம் அடைந்தனர். பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் இவரின் மனைவி மற்றும் மகன் பலியாகியினர்.
Advertisementகார் விபத்தில் இவர்கள் இருவரும் பலியாக சயான் மற்றும் காயங்களோடு பிழைத்தார். அப்போதே சயான் கண்ணீரோடு கொடுத்த பேட்டியில், இந்த விபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. இது திட்டமிட்ட கொலை. என் மனைவி மகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அப்போதே சயானை கொலை செய்ய முயன்று அந்த திட்டம் சொதப்பி இருக்கலாமோ என்றும் விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்றது.
தன் மனைவி மகன் மரணம் குறித்து போலீஸ் முறையாக விசாரிக்க வேண்டும் என்று சயான் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்த நிலையில்தான் தற்போது தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளனர். சயானின் மனைவி மற்றும் மகள் மரணம் குறித்து விசாரிக்க ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கும், அவர்களின் உறவினர்களிடம் விசாரிக்கவும் போலீசார் கேரள மாநிலம் பாலக்காடு சென்றுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கனகராஜ் இன்னொரு விபத்தில் பலியாகிவிட்டார். இவரின் மரணமும் மர்மமாக உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கனகராஜ் உறவினர் தனபால் கோரிக்கை வைத்து வரும் நிலையில் கனகராஜ் மரணம் குறித்து 3 தனிப்படையினர் நீலகிரியில் களமிறங்கி உள்ளனர். இவர் மரணம் அடைந்தது எப்படி, விபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்று விசாரித்து வருகிறார்கள்.