53 டாட் பால்கள்.. சேப்பாக்கத்தில் காடு வளர்த்த மும்பை அணி.. தெறிக்கவிட்ட சிஎஸ்கே பவுலர்கள்!
சென்னை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பவுலர்கள் மொத்தமாக 53 டாட் பால்களை வீசியுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறப்பாக பவுலிங் செய்த அன்சுல் கம்போஜ் 12 டாட் பால்களையும், ஜேமி ஓவர்டன் 11 டாட் பால்களையும், முகேஷ் சவுத்ரி 10 டாட் பால்களையும் வீசி அசத்தி இருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்திருந்தது.

ஆனால் அடுத்த 10 ஓவர்களில் மும்பை அணி வெறும் 67 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் இளம் வீரர் அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும், ராமகிருஷ்ணா கோஷ் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சிஎஸ்கே அணிக்கு இது சிறந்த பவுலிங் ஆட்டமாக அமைந்தது.
மொத்தமாக இந்த இன்னிங்ஸில் மட்டும் சிஎஸ்கே அணி வீரர்கள் 53 டாட் பால்களை வீசியுள்ளனர். அதிகபட்சமாக அன்சுல் கம்போஜ் 4 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்து 12 டாட் பால்களை வீசி இருக்கிறார். அதேபோல் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 11 டாட் பால்களை வீசினார். அதேபோல் முகேஷ் சவுத்ரி 3 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 10 டாட் பால்களை வீசி இருக்கிறார்.
நூர் அஹ்மத் 4 ஓவர்களில் 26 ரன்களை விட்டுக் கொடுத்து 9 டாட் பால்களையும், ராமகிருஷ்ண கோஷ் 3 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 6 டாட் பால்களையும், பிரசாந்த் வீர் 2 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 டாட் பால்களை வீசியுள்ளனர். இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை பேட்ஸ்மேன்களை டாட் பால்களை விளையாட வைத்து சிஎஸ்கே பவுலர்கள் ஒரு காடு வளர்த்திருக்கின்றனர்.
மும்பை அணிக்கு ஒரு போட்டியில் பேட்டிங் நன்றாக எடுபட்டால், பவுலிங் சிக்கலாக மாறுகிறது. ஒரு போட்டியில் பவுலிங் சிறப்பாக இருந்தால், பேட்டிங் பிரச்சனையாக மாறுகிறது. இதனால் மும்பை அணியில் அனுபவ வீரர்கள் இருந்த போதும், குழுவாக இணைந்து விளையாட தடுமாறி வருவது அந்த அணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications