தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- படகுகள் கதி என்ன?
தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்து வருகிறது. இதனைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12.03.2023 அன்று இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM- 7818) சிறைபிடிக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவமாகும். மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் .அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன. தனது முந்தைய கடிதங்களில், இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். வெளியுறவுத் அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உடனடியாக இதில் நீங்கள் தலையிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வ ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து 12 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் தொடர்பாக எந்த தகவலௌம் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications