CM கனவில் திருமா.. பிரஷர் கொடுக்கும் சிறுத்தைகள்! ’தோழர்கள்’ எடுத்த திடீர் முடிவு! உச்சகட்ட பரபரப்பு
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் விஜய் தலைமையிலான தவெக இன்னும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் தவித்து வருகிறது. இந்த சூழலில், திமுகவின் மிக முக்கியமான கூட்டணிக் கட்சியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே தற்போது தமிழக அரசியலில் முக்கியக் கேள்வியாக மாறியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், விஜய் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், நடைமுறையில் தவெக பலம் 107 ஆக குறைகிறது. இந்த சூழலில், முதலில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்தனர்.
தமிழக வெற்றிக்கழகம்
இதன்மூலம் தவெக பலம் 112 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களுடன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதனால், தவெக ஆதரவு பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்கு இன்னும் தேவையான எண்ணிக்கை கிடைக்காததால், விஜய் தலைமையிலான அரசு அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
விசிக
இந்த நிலையில், அரசியல் பார்வையாளர்களின் முழு கவனமும் தற்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் முடிவின் மீது திரும்பியுள்ளது. தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக விசிக உயர் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் தங்களது கருத்துகளை தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த தேர்தலில் விசிக வாக்கு வங்கி ஒரு பகுதி தவெகவுக்கு மாறியிருப்பதாக கட்சிக்குள் பேசப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொல்.திருமாவளவன்
இதனால், "அரசியல் நிஜத்தை புரிந்து கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று சில நிர்வாகிகள் நேரடியாக தலைமைக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்ற கருத்தும் விசிகவில் ஒரு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவுக்கு ஆதரவு
விசிக தவெகவுக்கு ஆதரவு அளித்தால், திமுக கூட்டணியில் பெரிய விரிசல் ஏற்படும் சூழல் உருவாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, விசிக தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை முதல்வர் பதவி, எதிர்கால இடைத்தேர்தலில் ஆதரவு உள்ளிட்ட அரசியல் சமரசங்கள் குறித்து தவெக மற்றும் விசிக இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இரு தரப்பும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மாற்று அரசு
மற்றொரு பக்கம், தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, "திருமாவளவன் தலைமையில் மாற்று அரசு அமைக்கும் வாய்ப்பு" குறித்த தகவல்களும் கசிந்துள்ளன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேரடியாக ஆட்சி அமைப்பதை விட, பொதுவான ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரை முன்னிறுத்தும் யோசனையிலும் சில அரசியல் நகர்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தமிழக அரசியலை மேலும் பரபரப்பாக்கியுள்ளன.
தமிழக அரசியல்
இந்நிலையில், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவை உறுதி செய்யும் கடிதங்களை மட்டுமே பரிசீலிப்பேன் என்று உறுதியாக கூறி வருகிறார். 118 உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்யாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என்ற அவரது நிலைப்பாடு காரணமாக, விஜய் இன்னும் காத்திருக்கும் சூழலில் உள்ளார்.
திமுக கூட்டணி
இதனால், விசிக எடுக்கும் முடிவு தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது. திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிப்பாரா? அல்லது திமுக கூட்டணியிலேயே தொடர்வாரா? இல்லை தான் முதல்வராக திட்டமிடுவரா? என்பதற்கான பதில், அவரது அறிவிப்பில் தான் இருக்கிறது. அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற பரபரப்பும் எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications