தவெகவை தோற்கடித்த போதகர்கள்- பாதிரியார்கள்.. குமரியில் 6 பேரும் தோற்றது எப்படி? வெளியான வீடியோ
கன்னியாகுமரி: ''கிறிஸ்தவ போதகர்கள், பாதிரியார்கள் குமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை தோற்கடித்து விட்டனர். தவெக ஆட்சியமைக்க தேவையான பெருபான்மை பெற முடியாமல் போனதற்கு பாதிரியார்கள் மற்றும் போதகர்கள், ஆயர் பேரவை தான் காரணம்'' என்று விளவங்கோடு தவெக வேட்பாளர் மைக்கேல் குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் என்று மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் விஜய்யின் தவெக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.

இதில் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரவீன் 70,755 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய தவெகவின் மைக்கேல் குமார் 49,795 வாக்குகள் வாங்கி 20,970 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாஜகவின் விஜயதாரணி 45,604 ஓட்டுகள் வாங்கி 3ம் இடம் பிடித்தார்.
தவெக வேட்பாளர் வீடியோ
இந்நிலையில் தான் கிறிஸ்தவ போதகர்கள், பாதிரியார்கள் குமரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை தோற்கடித்து விட்டதாக விளவங்கோடு தவெக வேட்பாளர் மைக்கேல் குமார் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
தவெக அரசு அமைக்க பெருபான்மை பெற முடியாமல் போனதற்கு பாதிரியார்கள் மற்றும் போதகர்கள் ஆயர் பேரவை தான் என்று குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
சில உண்மைகளை சொல்கிறேன்
தமிழகத்தில் நல்ல தலைவர் ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்து இருக்கிறீர்கள். உங்கள் கோடான கோடி உள்ளங்களுக்கு நன்றி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தவெக போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.
எங்கள் தோல்விக்கு காரணமானவர்கள் என்று யாரையும் கூற முடியாமல் இருந்தாலும் சில உண்மைகளை கூற வேண்டும்.
தமிழக எதிர்கால அரசியலை பொறுத்தவரை இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் தவெக வென்று இருந்தால் அதன் அர்த்தமே வேறாக அமைந்திருக்கும்.
நிச்சயமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத வளர்ச்சி பணிகள் நடந்து இருக்கும்.
ஏன் என்றால் எங்கள் அன்பு தலைவர் எங்களை எல்லாம் அழைத்து பேசும் போது மக்கள் உங்களை ஆதரிப்பார்கள். நீங்கள் வெற்றி பெற்று வாருங்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அந்த வாய்ப்பை தவற விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
பாதிரியார்கள் - போதகர்கள்
இதற்கு முழு காரணம் மத அரசியல் தான் என்பது இந்த தேர்தலிலும் உண்மையாக நிருபிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ போதகர்கள். நான் சாதாரணமாக இது போன்ற கருத்துகளை வெளியிடாதவன். அவர்களை சார்ந்த நிலையில் இருப்பவன். ஆனால் மிகவும் வருத்தத்தோடு வெளியிடுகிறேன்.
எனது சக வேட்பாளர்கள் 1200 ,2000,2500 ஓட்டுகளில் வெற்றியை இழந்தார்கள். இது மிக பெரிய துரதிருஷ்டம். இதற்கு முழுக்க முழுக்க காரணம் கிறிஸ்தவ மத பாதிரியார்கள், போதகர்கள். இவர்கள் அரசியல் செய்கிறார்களா ஆன்மீக பணிகளை மேற்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தி சமுதாய மேம்படுத்த உழைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
இவர்கள் இயேசுவின் சித்தாந்தத்தை பரப்புகிறார்களா இல்லை இவர்கள் யாருக்காக அரசியல் செய்கிறார்கள். உண்மையான அரசியல் கட்சிக்காகவா,அரசியல் தலைவருக்கான வா புரியவில்லை.
போதனையில்...
இன்று தமிழக மக்கள் முதல்வராக இருந்த ஸ்டாலினையே வீழ்த்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழக மக்கள் இருக்கும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வித்தியாசமாக இருக்கிறது தேவாலயங்களில் ரகசியமாக பேசுகின்றனர். பேராலயங்களில் வாசிக்கின்றார்கள் இவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும். பாஜக உள்ளே வந்து விடும் என்று தவறான போதனைகளை செய்கின்றனர். இன்றைக்கு நிலைமை என்ன குமரி மாவட்டத்தில் ஆக சிறந்த தனி கட்சி தவெக தான்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் கூட 50 ஆயிரம் வாக்குகள் பெற்று இருக்கிறோம். காங்கிரஸ் பத்தாயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று இருந்தால் கூட அவர்கள் எத்தனை கட்சி கூட்டணி என்பதை தெரிய வேண்டும். காங்கிரஸ் 32 ஆயிரம் வாக்குகள் தான் மற்ற வாக்குகள் கூட்டணி கட்சிகளுக்கு உரியது. இதை சிந்தித்து பார்க்க வேண்டும்
இன்று பாஜக தவெக வால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று அரசியல் களத்தில் அவர்கள் இல்லை. தமிழக வெற்றி கழகத்தால் அவர்கள் தமிழகத்திலேயே இல்லை என்று சொல்ல வேண்டும்.
மக்கள் புரிந்து கொள்வார்கள்
தவெகவுக்கு போதகர்கள், பாதிரியார்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டாம். நீங்கள் உங்கள் ஆன்மீக பணிகளை மட்டுமே பார்த்து இருந்தால் போதும் மக்களுக்கு அல்லலை ஏற்படுத்தி இருக்க கூடியவர்கள் தமிழக ஆயர் பேரவை என்று கூற கூடியவர்களும் இந்த பாதிரியார்களும், இந்த போதகர்களுதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களை படித்த குமரி மாவட்ட மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். தேர்தலுக்கு ஒரு நாள் முன்புதான் இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த செயல்களை செய்து இருக்கிறார்கள் என்பது இன்று அப்பட்டமாக தெரியவந்துள்ளது. தலைவர் விஜய்க்கு ஒரு சில இடங்கள் மட்டுமே பெரும்பான்மை குறைய காரணம் இவர்கள் தான் என்று பகிரங்கமாக கூறுகிறேன்.
பக்கப்பலமாக நிற்க முடியவில்லையே
இதனால் விமர்சனங்கள் எழலாம். ஆனால் அதற்கு விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறேன். அதனால் இது போன்ற தவறுகளை இனிமேல் செய்ய கூடாது நீங்கள் செய்த தவறுக்கு என்ன பிராய சித்தம் என்பது தெரியாது.விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஒரு கத்தோலிக்க பிஷப்பிடம் 8 கோடி வேலைக்காக 22 கோடி வாங்கிய வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலைமையை உங்கள் கத்தோலிக்க சபையை சேர்ந்தவர்கள் செய்து என் வெற்றிக்கு தடையாக நின்றுள்ளீர்கள்.
இது வருத்தம் அல்ல. தலைவர் விஜய்க்கு பக்கபலமாக நிற்க முடியவில்லை என்ற வருத்தம் தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications