இதமான பனியுடன் தொடங்கும் டிசம்பர் மாதம்

கார்காலம் மெல்ல மறைய பனிக்காலம் எட்டிப்பார்க்கும் மாதம்தான் டிசம்பர். ஆங்கில மாதத்தின் கடைசி மாதமாய் இருந்தாலும் ரம்மியம் தொடங்கும் மாதம்தான் டிசம்பர்.
இலத்தீன் மொழியில் 'பத்து' எனும் பொருள் தரும் 'டிசம்பர்' ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக இருந்தது. ஆனால் கிரெகொரியன் நாட்காட்டியின் இது பன்னிரண்டாவது மாதமாக 31 நாட்களைக் கொண்டுள்ளது.
குளிர் காலமும் முன்பனிக்காலமும் இணைந்த கலவையான மாதம் டிசம்பர். கார்த்திகை மாதத்தின் நடுவில் தொடங்கினாலும் மழைக்காலம் மெல்ல முடிந்து லேசாக குளிர் வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும். மார்கழியில் மண் குளிரும் என்பார்கள். அந்த அளவுக்கு இனிமையான குளிரைக் கொண்ட மாதம் மார்கழி, அதை உள்ளடக்கிய டிசம்பர்.
இந்த ஜில் ஜில் குளிரை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மார்கழி மாதக் குளிரில் ஓஸோன் அதிகம் இருப்பதால் மார்கழி மாதத்தில் காலையில் எழுந்து வாக்கிங் போவது உடம்புக்கு நல்லது என்பார்கள்.
செவிக்கும் நாவுக்கும் சுவை
சென்னையில் டிசம்பர் மாதம் என்றாலே சபாக்கள் களை கட்டும். மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், பாரதீய வித்யா பவன், மியூசிக் அகடெமி, நாரதகான சபா என ஒவ்வொரு சபாவிலும் இசைக் கலைஞர்கள் தங்களின் திறமையை நிரூபித்துக்கொண்டிருக்க கேண்டீனில் வித விதமாய் சமைக்கப்பட்ட பல காரங்களை ஒரு கை பார்த்துக்கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். ஒரே சமயத்தில் செவிக்கும் நாவுக்கும் தரும் சுவையினை பார்த்து ரசிப்பதே அலாதி சுகம்தான்.
பக்தி மனம் கமழும் மார்கழி
டிசம்பரின் நடுவில் இதமான மார்கழி மாதம் பிறக்கும். அதிகாலையில் எழுந்து பெண்கள் ஈரத் தலை சொட்ட சொட்ட வாசலில் கோலமிட்டு சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ சென்று வருவார்கள்.
வீதிகளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடியபடி வருவதை கேட்க செவிகளோடு மனமும் குளிரும். அதே மகிழ்ச்சியோடு அந்த நாளினை தொடங்க அனைத்து வேலைகளும் இதமாய் முடியும்.
பனித் துளிகள் கோர்த்து நிற்க, பூத்து நிற்கும் மார்கழிப் பூக்கள் மனதை லேசாக்கும். பனி படர்ந்த மார்கழி முழுவதும் மனம் நம்மிடம் இருக்காது. எத்தகைய 'இடி அமீனாக' இருந்தாலும் இந்த மார்கழியில் மயங்காத உள்ளமே இருக்க முடியாது.
கிருஸ்தவர்கள் கொண்டாடும் மாதம்
டிசம்பர் மாதத்தில்தான் இயேசு பிரான் அவதரித்த நாளும் வருகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் கிருஸ்துவ மக்கள் டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே தங்கள் வீடுகளில் நட்சத்திரங்களால் ஆன அலங்கார பலூன்களை கொண்டு அழகு படுத்தியிருப்பர்.
தேவ தூதன் அவதரிக்கப்போகிறார் என்பதை உணர்த்துவதற்காகவே இது போன்ற நட்சத்திர பலூன் அலங்காரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மாதத்தில் தான் அரையாண்டு விடுமுறையோடு கிருஸ்துமஸ் விடுமுறையும் வருவதால் வாண்டூஸ்களுக்கு மிகவும் பிடித்த மாதமும் இதுதான் என்றால் மிகையாகாது.
மொத்தத்தில் அடுத்து வரும் 31 நாட்களும் அருமையான குளிரையும், பாரம்பரியான பண்டிகைகளையும் கொண்டாட அனுபவிக்க தயாராவோம்...












Click it and Unblock the Notifications