இறைபொற்கொடியுடன் ஒரு சந்திப்பு
அவரவர்க்கு அவரவர் தாய் மொழியின் மீது பற்று இருப்பது இயற்கைதான். அதனால்தான் கடல் கடந்து சென்ற பிறகும் கூட அந்த நாட்டில் நம்தாய்மொழி பேசும் ஒரு நபரைப் பார்த்தவுடன் பாசம் பிறக்கிறது. பேசி மகிழ்கிறோம். அந்த வகையில் நம் தாய்மொழியான தமிழ், உலக அளவில்சட்டபூர்வ அங்கீகாரம் பெறும் வகையில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்னமும் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை வ-லியுறுத்தி ஏராளமானோர் போராடிக் கொண்டும், ஒரு சிலர் களத்தில் இறங்கிசெயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திருவள்ளுவர் தமிழ் வழிப் பள்ளியை நடத்தி வருபவரும், தமிழறிஞர்பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் புதல்வியுமான திருவாட்டி இறை.பொற்கொடி அவர்களை சந்தித்து தமிழ் வழிக் கல்வி தொடர்பான பல்வேறுவினாக்களை எழுப்பினோம். அவர் பகிர்ந்த பதில்கள் இதோ...
தமிழ் வழிப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டியதன் அவசியம் என்ன?
குழந்தைகளிடையேயும், மாணவர்களிடையேயும் சமூகக் கூட்டுணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தில் ஆங்கில மொழித்தாக்கம் அதிகமிருப்பதைத்தவிர்க்கவும், தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை போன்றவற்றின் அழிவைத் தடுக்கவும் தமிழ் வழிக் கல்வி அவசியம். தாய் மொழியில்பயில்வதனால் எளிதாக புரிந்து கொண்டு அச்சமில்லாமல், சிக்கல் இல்லாமல் பயில முடியும். கால விரயம் தவிர்க்கப்பட்டு அக வளர்ச்சி அதிகமாகும்.
கல்வி அறிவை எந்த மொழி வாயிலாகவும் பெறலாம். அவரவர் தத்தம் தாய்மொழி வாயிலாகவேப் பயில்கிறார்கள். அதைப் போலவேதமிழர்களும் தம் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயில வேண்டும் என வ-லியுறுத்துகிறோம். தாய்மொழி என்பது குறிப்பிட்ட மொழியைக்குறிப்பதன்று. எந்த ஒரு மொழியையும் இயல்புமையாக கொண்ட மக்களுக்கு அம்மொழி தாய்மொழியே.
தமிழ்வழிப் பள்ளிகளின் செயல்பாடு எப்படி உள்ளது?
கடந்த 1991 ஆம் ஆண்டு முதன் முத-ல் தமிழ் வழிப் பள்ளியை நான் தொடங்கினேன். அதன் பிறகு திரு.தியாகு தொடங்கினார். பின்னர் பரவலாக தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் தமிழ் வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இன்றைய நிலையில் நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாகசெயல்பட்டு வருகின்றன.
தமிழ் வழிப் பள்ளிகள் இணைந்து தமிழ் வழிக் கல்விக் கழகம் என்ற அமைப்பையும் அனைத்து தமிழ் வழிப் பள்ளிகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பையும்ஏற்படுத்தியிருக்கிறோம். இரண்டு அமைப்புகளுக்கும் நான் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன். எங்களுக்கென்று ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கிஅதன்படி பயிற்றுவிக்கிறோம். பாடத்திட்டங்களில் புகுத்தப்பட்ட பொய்யான வரலாற்றை துணிவாக எதிர்க்கிறோம். எங்கள் பள்ளிகளில் பயிலும்மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக் கூடாது. எங்கள் பள்ளிகளில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை. சாதி என்ற இடத்தில் தமிழர்என்று எழுதுகிறோம். அதையே பயிற்றுவிக்கிறோம். மொத்தத்தில் தமிழ்ப் பண்பாட்டை சீர்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
தமிழ் நாட்டில் தமிழ் வழிப் பள்ளிகள் அதிகம் தொடங்கப்படாததற்கு என்ன காரணம்?
பொதுவாகவே மக்களுக்கு ஆங்கிலத்தின் மேல் உள்ள கவர்ச்சியின் காரணமாக நமது பிள்ளைகளும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்றுஆசைப்படுகிறார்கள் என்பதே முக்கியமான காரணம். தமிழ் வழிப் பள்ளிகளில் ஆங்கிலப் பள்ளிகளைப் போல கட்டணம் வாங்கக் கூடாது என்பது எங்களின்நோக்கம். எனவே ஒரு மாணவரிடம் மிகக் குறைந்த அளவாக 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வாங்குகிறோம். இங்குள்ள ஆசிரியர்களும்தொண்டுணர்வோடு பணிபுபவர்களே. இந்தப் பொருளாதாரச் சிக்கலும் தமிழ் வழிப் பள்ளிகள் அதிகம் தோன்றாததற்கு ஒரு காரணம்.
ஒரு சிலர் பயப்படுவது போல தமிழ்வழிப் பள்ளியில் பயிலும் மாணவர் களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடுமா?
தமிழ் வழிப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் சொல்லி-த் தருகிறோம். பிற பாடங்களை விட தமிழில் அதிகம் சொல்லி-த் தருகிறோம்.எனவே இங்கு பயிலும் மாணவர்கள் ஆங்கில அறிவற்றவர்களல்ல. வேலைக்காக படிப்பது என்ற உணர்வைத் தவிர்த்து அறிவை விருத்தி செய்துகொள்ளத்தான் படிப்பு என்பதை உணர்ந்து படித்தாலே போதும். எதிர்காலம் மட்டுமல்ல எந்தக் காலமும் கேள்விக்குறியாகாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது கூட ஆங்கில வழிக் கல்விக்காக கிடைப்பதல்ல. அந்தந்த நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிக்குத்தான் முதல் இடம். எனவே இந்தக்கேள்வியை முறியடிக்கும் வகையிலேயே தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் திகழ்கிறார்கள்.
தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச் சான் றோர்கள் இப்பள்ளிகள் குறித்து பெருமளவு ஆர் வம் எடுத்துக் கொள்கிறார் களா?
கருத்தளவிலும், பொருளளவிலும் போராட்ட அளவிலும் பெரும் ஆதரவு தருகிறார்கள். இனியும் தருவார்கள் என்கிற நம்பிக்கை நெஞ்சு நிறைய உண்டு.
தாய்மொழியை புறக்கணித்து விட்டு மற்ற மொழியில் படிப்பதால் என்ன பாதிப்பு வந்து விடும்?
நடைமுறை வாழ்க்கையில் தாய் மொழியே தெரியாமல் போய் விடும். பொது இடங்களில் தன் நிலையை எடுத்துரைக்க தாய் மொழியைப் போல் மற்றமொழியினால் முடியாது. தாய் மொழியைப் புறக்கணிக்காமல் படிப்பவர்கள் எளிதாக தெளிவடைகிறார்கள்.
தாய்ப்பாலைப் புறக்கணித்து விட்டு மாட்டுப் பாலை குழந்தைக்கு குடிக்கக் கொடுத்தால் ஊட்டச்சத்து எப்படி கிடைக்கும்?
எல்லா இந்திய மாநிலங்களிலும் அவரவர் தாய் மொழியில்தான் கல்வி பயில்கிறார்கள். அந்த மொழியில்தான் ஆட்சியும் நடக்கிறது. ஒரு சாதாரணவிண்ணப்பப் படிவம் கூட அவரவர் மொழியில்தான் உள்ளது. அவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழிதானே தவிர உலக மொழியல்ல.
தமிழ் செம்மொழியானதால் தமிழ் வழிப் பள்ளிகளுக்கு எந்த வகையில் வலுவூட்டும்?
செம்மொழி என்று அரசால் அதிகார பூர்வமாக இப்போது அறிவிக்கப்பட்டா லும் கூட ஏற்கனவே தமிழ் செம்மொழி தான். இந்த அறிவிப்பால்உண்மையான நடைமுறையாளர்களுக்கும், தமிழ் வழிப் பள்ளிகளுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் ஒரு புத்துணர்வு கிடைத்திருக்கிறது என்றாலும்பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்ப் படித்தவர்களுக்குத்தான் வேலை, தமிழ் ஆட்சி மொழி போன்றவை தான் தமிழர்களுக்குஇன்னும் மகிழ்ச்சி தரக் கூடியவை. செம்மொழியாக அறிவிக்கப்படக் கூடிய அளவிற்கு தகுதியான ஒரு மொழியில் கல்வி பயிற்றுவிக்கக் கூடாதா?கோயில்களில் வழிபாடு செய்யக் கூடாதா? என்பன போன்ற கேள்விகளும் எஞ்சியிருக்கின்றன.
தமிழ் வழிப் பள்ளிகளுக்கு அரசு ஏற்பிசைவு தருவதில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும். அப்படியே ஏற்பிசைவு கொடுத்தாலும் அரசிடமிருந்து சலுகைகள்கேட்கக் கூடாது என்று எழுதி வாங்கிக் கொண்டுதான் தருகிறார்கள்.
தமிழ் வழிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு, இலவச புத்தகங்கள், உந்துச்சீட்டு போன்றவை வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறோம்.
- மன்னை பாஸ்கர்([email protected])
இவரது முந்தைய படைப்புகள்:
1. அஞ்சு நிமிஷம்
2. குழப்பம்
3. இன்டர்வியூ
4. சாலமன் பாப்பையாவுடன் ஒரு சந்திப்பு
5. தமிழ்க் கவிஞர்கள் தகுதியற்றவர்களா
6. இயக்குநர் சேரனுடன் ஒரு சந்திப்பு
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.