தூய தமிழ்க் காவலரின் நூற்றாண்டு விழா
1966ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலைப் பொழுதில் மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு மதிக்கத்தக்க தோற்றம் படைத்த பெரியவர் ஒருவர்வந்திருந்தார். அவரை வரவேற்று அமரவைத்த போதிலும் இன்னாரெனப் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தேன்.
"குடியேற்றம் அண்ணல் தங்கோ என அவரே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது நான் அளவிலாத மகிழ்ச்சி அடைந்தேன்.தமிழறிஞரான எனது தந்தையார் கி. பழநயப்பனார் அவர்களைச் சந்திக்கவே அவர் வந்திருந்தார். வெளியில் சென்றிருந்த எனதுதந்தையார் வரும்வரையில் அவருடன் பேசி மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
தூயதமிழில் அவர் உரையாடியது என்னை மிகவும் கவர்ந்தது. ஏற்கெனவே அவர் எழுதிய நூல்களின் மூலம் அவரைப்பற்றி ஓரளவுஅறிந்திருந்தேன். குறிப்பாக "மும்ர்த்திகள் உண்மை தெரியுமா? என்ற தலைப்பில் அவர் எழுதிய புதுமையான நூலை மாணவப்பருவத்திலேயே நான் மிகமிகச் சுவைத்துப் படித்திருக்கிறேன். அந்நூலாசியரே எங்களின் இல்லத்திற்கு வருகை தந்திருப்பது கண்டுபரபரப்படைந்தேன்.
பேராயக் கட்சியில் நான் ஈடுபட்டிருப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார். "தமிழரான காமராசர் அனைத்திந்தியப் பேராயக் கட்சியின்தலைவராக இருக்கும் போது உங்களைப் போன்ற இளைஞர்கள் அதில் இருப்பது மகிழ்ச்சிதான், நானும் பேராயக் கட்சியில் பல்லாண்டுகள்தொண்டாற்றிச் சிறை சென்றவன்தான்.
அந்த நாளில் சிறை, சிறைவாழ்வு என்பது மிகவும் துன்பம் தருவது, அவற்றையெல்லாம் இன் முகத்துடன் ஏற்று நாட்டு விடுதலைக்காகப்போராடினேன். ஆனாலும் உண்மையான தமிழர்களுக்கு அங்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து வெளியேறினேன் எனக் கூறினார்.
பிறகு மதுரையைச் சேர்ந்த பேராயக் கட்சித் தோழர்கள் குறித்து வினவினார். தியாகிகள் திரு. ரெ. சிதம்பரபாரதி, சீனிவாச வரதன்,சோமயாசுலு போன்றோருடன் இணைந்து கள்ளுக்கடை மறியல், நீலன் சிலை உடைப்புப் போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுச் சிறைசென்றதை நினைவு கூர்ந்தார்.
அவரது பேச்சும் மூச்சும் தமிழுக்காக தமிழனுக்காக இருப்பதை அன்று அறிந்து கொண்டேன். அந்த நாள் எனது வாழ்வின் சிறந்த நாள்களுள்ஒன்றாகும். அவரது சந்திப்பு எனது சிந்தனையிலும், செயலிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறினால் அதுமிகையாகாது.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியத் துணைக்கண்ட விடுதலைக்காகப் போராடி, சிறை சென்று அரிய ஈகம் புரிந்த அவர் தமிழைக்காக்கவும், தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் அயராது பாடுபட்டார். வடமொழிப் பிடியில் சிக்கிக் கிடந்த தமிழை மீட்கும் போரின்தளபதியாகத் திகழ்ந்தார்.
தமிழ் காக்கும் பணியையே தலையாய பணியாகக் கொண்டார். தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெரியோர்களில் அவரும்ஒருவர்.
பெரியார் ஈ.வெ.இராமசாமி, பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம், மறைமலையடிகள்,பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு பாவாணர், தமிழவேள் பி.டி. இராசன், சர். ஏ.டி. பன்னீர்செல்வம், நாவலர் சோமசுந்தர பாரதியார்,தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஞானியார் அடிகள், கலைஞர் மு. கருணாநிதி போன்றவர்களுடனும்
மற்றும் பல தலைவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோருடனும் நெருங்கிப் பழகி அவர்களோடு இணைந்து நின்று தமிழ்வளர்ச்சி, தமிழர் நலன்ஆகியவற்றுக்காக வாணாள் முழுவதும் அயராது, தளராது தொண்டாற்றிய தூயதமிழ்ப் போராளி அண்ணல் தங்கோ ஆவார்.
தன்னலமறுப்பு, பயன்கருதாத தூய தொண்டு, தமிழின் மேல் கரைகாணாத காதல், தமிழர் விழிப்புணர்வே வாழ்வின் குறிக்கோள் ஆகியநற்பண்புகள் நிறையப்பெற்ற அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதன் மூலம் இளைய சமுதாயம் புத்தறிவு, புத்துணர்வு பெறமுடியும். இன்றைய இளந் தமிழர்களுக்கு அவரே சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
தமிழ்த் தேசியம் வீறுகொண்டு எழுந்திருக்கும் இவ்வேளையில் தூய தமிழ்க்காவலர் அண்ணல் தங்கோ அவர்களின் நூற்றாண்டு விழாவில்எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் செயலுக்கு வர நாம் முயலுதல் வேண்டும். அதுவே அவரது நினைவுக்கு நாம் செலுத்தும்காணிக்கையாகும்.