துபாய் தமிழர்களின் முப்பெரும் விழா
துபாய்: துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு முப்பெரும் விழாவினைக் கொண்டாடுகிறது.
உழைப்போம்! உயர்வோம்!! உதவுவோம்!!! எனும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு சமுதாயப் பணியில் தனது ஆறாம் வயதினை பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
அதனை நினைவுறுத்தும் வகையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் 7வது ஆண்டு துவக்க விழாவும், பவள விழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழாவும், அமீரகத்தில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற்றவர்களை கெளரவிக்கும் வண்ணமாகவும் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் நடைபெறுகிறது.
அங்குள்ள ஷேக் ரசீத் உள்ளரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பின் பக்கீத் நிறுவன தலைவர் ஷேக் சுல்த்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ருஷி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ், அன்பு மருத்துவமனை மற்றும் கல்வி சார் நிறுவனங்களின் நிறுவனர் குடந்தை அன்பழகன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீரசேகரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன் கலைஞர் டிவி புகழ் "எல்லாமே சிரிப்புதான்" குழுவினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
விழாவில் ஆண்டுமலர் வெளியீடு, அங்கத்தினர்கள் பங்கேற்கும் சிலம்பம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் பெற 050 4748490 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு தெரிவித்துள்ளது.