For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலர் தினம்-ஒரு ரோஜா ரூ. 40!

By Staff
Google Oneindia Tamil News

Single rose
ராஜா இல்லாமல் ராஜ்யம் இல்லை. அதேபோல ரோஜா இல்லாமல் காதலும் இல்லை. இரண்டு இதயங்கள் இணைய ஒற்றை ரோஜா போதும். அந்த சிவப்பு ரோஜாவுக்கு மற்ற எந்த நாளையும் விட காதலர் தினத்தன்றுதான் படு கிராக்கி. இந்த ஆண்டு காதலர் தினத்தன்று பல உலக நாடுகளை தமிழக ரோஜாக்கள் வசீகரிக்கப் போகின்றன.

தமிழகத்தின் ஓசூர் நகரம்தான் ரோஜா உற்பத்திக்குப் பெயர் போனது. இங்கு காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ரோஜாக்களை அனுப்பும் பணி படு வேகமாக நடந்து வருகிறது.

அதேபோல பக்கத்து மாநிலமான கர்நாடத்தின் தலைநகர் பெங்களூரிலும் ரோஜாவை பேக்கப் செய்து அனுப்புவது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

பெங்களூருக்கு நிகராக தற்போது ஓசூர் ரோஜாக்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. பெரும் கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. ஓசூர் மற்றும் பெங்களூரில் மட்டும் 60க்கும் மேற்பட்ட ரோஜா தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து செல்லும் ரோஜாக்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மேற்கு ஆசியா, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனவாம்.

குறிப்பாக ஓசூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் 10 லட்சம் ரோஜாப் பூக்கள் அனுப்பப்படுகின்றன. காதலர் தினத்தன்று மட்டும் இந்த எண்ணிக்கையில் ரோஜாக்கள் செல்கின்றன. தற்போது மேலும் சில நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளதால் இரவு பகலாக ரோஜாக்களை அனுப்பும் பணி நடந்து வருகிறதாம்.

இதுகுறித்து டான்புளோரா அடிப்படைக் கட்டமைப்பு பூங்கா நிறுவன நிர்வாக இயக்குநர் நஜீப் அகமது கூறுகையில், ஆண்டுதோறும் ரோஜா ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிப்ரவரி மாதம் ஏற்றுமதி அளவு அபரிமிதமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 50 சதவீத அதிக ரோஜாக்களை ஏற்றுமதி செய்யவுள்ளோம் என்றார்.

ஓசூர் பிராந்தியத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீத உற்பத்தி அதிகரித்துள்ளதாம். உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் ரோஜாக்களின் டிமாண்ட் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த முறை அதிக அளவிலான ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

நாட்டின் மொத்த ரோஜா உற்பத்தியில் ஓசூரின் பங்கு 35 சதவீதமாகும். தொழில் நகர் என்ற அந்தஸ்துடன் திகழும் ஓசூரில் ரோஜா உற்பத்தியும் ஒரு பெரிய தொழிலாக மாறியுள்ளது.

ஓசூர் அருகே உள்ள அமுகொண்டனபள்ளி கிராமத்தில் டான்புளோரா நிறுவனத்தின் மிகப் பெரிய ரோஜா பண்ணை உள்ளது. இதன் பரப்பளவு 50 ஹெக்டேர். ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜாப் பண்ணை இதுதானாம். இங்கிருந்து ஆண்டுதோறும் 3 கோடி ரோஜாக்கள் ஏற்றுமதியாகின்றனவாம்.

இந்தப் பண்ணையில் 35 வகையான ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் இதை 150 வகைகளாக உயர்த்தும் திட்டம் உள்ளதாக அகமது கூறுகிரார்.

தமிழக அரசின் ஊக்குவிப்புடன், அரசின் சார்பில் இந்தப் பண்ணை அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவின் முன்னணி ரோஜா உற்பத்தி மையங்களில் முன்னணியில் உள்ள ரோஜாப் பண்ணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 70 ஆயிரம் ரோஜா செடிகளைப் பயிரிட முடியுமாம். ஒவ்வொரு செடியிலிருந்தும் 20 முதல் 22 பூக்கள் கிடைக்குமாம்.

காதலர் தினத்தன்று சுத்தமான சிவப்பு ரோஜாக்களுக்குத்தான் நிறைய கிராக்கி இருக்கும். இருப்பினும் ஜப்பானியர்கள் மட்டும் பிங்க் நிற ரோஜாக்ளை விரும்புகிறாரார்களாம். ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் மஞ்சள் ரோஜாக்ளையும், ஆரஞ்சு நிற ரோஜாக்களையும் விரும்புகிறார்களாம்.

இந்த நாடுகளில் ஒரு இந்திய ரோஜாவின் விலை ரூ. 15 முதல் ரூ. 40 வரை இருக்கிறது. ரோஜாப் பூவின் நீண்ட தண்டைப் பொறுத்து அதன் விலை மாறுபடுமாம். 40 செ.மீ நீளமுடைய ரோஜாவின் விலை ரூ. 10. அதுவே ஒரு மீட்டர் நீளமுடையதாக இருந்தால் அதன் விலை ரூ. 40.

காதல் ராஜாக்களுக்கும், காதல் ராணிகளுக்கும் நாளைய தினம் ரம்யமாக அமைய கை கொடுக்கும் ரோஜாக்கள் - நாளை ஒரு நாள் மட்டும் உலகை ஆளும் மகாராஜாக்கள்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X