திறக்கிறது பிகாசோவின் கல்லறை
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மாபெரும் ஓவியர், சிற்பி பாப்லோ பிகாசோ. அவர் வரைந்த ஓவியங்கள் உலகெங்கும் இன்றும் உயரிய இடத்தில் வைத்து ரசிக்கப்படுகிறது.
பிகாசோ மரணமடைந்து 35 ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்லறைத் தோட்டம் மூடப்பட்டுக் கிடக்கிறது. யாரும் இங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் பொதுமக்கள் கல்லறையைப் பார்வையிட வசதியாக கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறைத் தோட்டத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை பிகாசோவின் கடைசி மனைவி ஜேக்குலின் ரோக்-க்கும், பிகாசோவுக்கும் பிறந்த மகளான காத்தரின் ஹடின் அளித்துள்ளார்.
பிகாசோவின் கல்லறை 6 மாதங்களுக்குத் திறந்திருக்கும். பிகாசோவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட செட்யூவில்தான் பிகாசோவின் வரைவிடம் உள்ளது. அங்கிருந்தபடிதான் அவர் பல்வேறு அழகிய படைப்புகளை வரைந்தார். அந்த இடம் உடல் அடக்கத்திற்குப் பிறகு அப்படியே மூடப்பட்டு விட்டது.
பிகாசோ பயன்படுத்திய தூரிகைகள், பெயின்ட் உள்ளிட்டவை அப்படியே அங்கு விடப்பட்டன.
மேலும் அந்த ஸ்டுடியோவில் உள்ள படுக்கை அறையில் பிகாசோ பயன்படுத்தி படுக்கைகள், கட்டில்கள், அவர் வாசித்த மாண்டலின் இசைக் கருவி உள்ளிட்டவையும் அப்படியே உள்ளன.
குளியலறையில் உள்ள பாத் டப்பில் கூட அழகான பல ஓவியங்களை பிகாசோ வரைந்து வைத்துள்ளாராம்.
இந்த நிலையில் கல்லறை பார்வையாளர்களுக்காக திறக்கப்படவுள்ளதால் அவற்றையெல்லாம் மக்கள் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த கல்லறைத் திறப்பையொட்டி பிகாசோவின் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சிக்கும் அந்த வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த கண்காட்சி நடைபெறும்.