ஜன நெரிசலில் மும்பையை முந்தியது டெல்லி!
நம் நாட்டில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட பெருநகரம் என்ற பெருமையை இதுவரை மும்பை வகித்து வந்தது. ஆனால் இந்த பெருமையை தலைநகர் டெல்லி தட்டிச் சென்றுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த அமெரிக்க நிறுவன அதிகாரி கார்ல் ஹாப் கூறுகையில்,
"மக்கள் நெரிசல் பற்றிய கணக்கெடுப்பில் மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கணக்கிடப்படும் குறியீடுகளை வைத்துப் பார்த்தால் கடந்த 2007ம் ஆண்டிலேயே மும்பையை முந்திவிட்டது டெல்லி.
ஒரு மெட்ரோபாலிட்டன் எல்லையை வரையறுக்கும்போது அதனைச் சுற்றியுள்ள புறநகர் மற்றும் நகராட்சிகளையும் சேர்த்துதான் கணக்கிடவேண்டும். உலக அளவில் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. மெட்ரோபாலிட்டன் நகரத்தின் எல்லை அதன் அருகில் உள்ள மாநிலத்துக்குள் விரிவடைய முடியாது.
தலைநகர் பிரதேசம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள தன்னாட்சி நிர்வாகம் நடக்கின்ற தலைநகர் டெல்லியின் விஸ்தீரணம் உண்மையிலேயே மிகப் பெரியதாகும். அண்டை மாநிலமான ஹரியானாவிலும் டெல்லி புறநகர் பகுதிகள் அமைந்துள்ளன. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த பகுத மக்கள் டெல்லி ஜனத்தொகையில் சேர்க்கப்படமாட்டார்கள். இதனால் அதன் உண்மையான ஜனத்தொகை குறைத்து மதிப்பிடப்படுகிறது.
மற்ற இந்திய பெருநகரங்களைப்போல இதையும் கருதினால் மும்பையைக் காட்டிலும் டெல்லியில் ஜனநெரிசல் அதிகம் இருப்பது தெரியும்" என்றார்.