'பண்பாட்டு வேர்கள்': வைரமுத்து
நகரத்தை விட கிராமங்களில்தான் பண்பாடு அதிகம். அந்த பண்பாட்டு வேர்களை வணங்குகிறேன். படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு சென்றாலும் உங்கள் வேர் கிராமங்களில்தான் இருக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவும், சீனாவும்தான் வல்லரசாக விளங்கும்.
அதற்கு மனித சக்திதான் காரணம். பலகீனமாக கருதப்பட்ட இந்திய மக்கள் தொகை இன்று பலமாக விளங்குகிறது. தடைக் கல்லை படிக்கல்லாக மாற்றியுள்ளோம்.
பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சில அரசாங்கம் கெஞ்சுகிறது. இந்திய மக்கள் தொகையை கொண்டு பூமி பந்தின் மத்தியில் பூமத்திய ரேகையை சுற்றி நிற்க வைத்தால் 8 முறை சுற்றி நிற்க வைக்க முடியும்.
பூமிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவெளியில் நிற்க வைத்தால் கடைசி 4 பேர் நிலவில் இறங்கி நடக்கலாம்.
கசப்பு மருந்து சுவைக்காது. ஆனால் நோயை குணப்படுத்தும். அதுபோல வாழ்வில் வெற்றி பெற உழைப்பை விலையாக கொடுக்க வேண்டும். கைரேகை தேய தேய உழைப்பதுதான் வாழ்க்கை. வெளிநாட்டில் பிரசவத்தின்போது வலி தெரியாமல் இருக்க மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு பெண்கள் புத்தகம் படித்துக் கொண்டை குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். அந்த மருந்தை இந்திய தாய்மார்களிடம் கொடுத்தபோது சாப்பிட மறுத்துவிட்டனர். வலியை உணர்ந்தால்தான் குழந்தை மீது பாசம் உண்டாகும் என்கின்றனர்.
கற்புக்கரசி கண்ணகியின் பேத்தியான தமிழ் பெண் தன் காதலனிடம் பேசு, பழகு ஆனால் உன் நிழல் கூட திருமணத்துக்கு முன் என் மீது படக்கூடாது என்பாள்.
தங்கத்தை போல தவம் செய்தால்தான் காதலி்ல் கூட வெற்றி பெற முடியும். சிறு கஷ்டத்துக்குக் கூட பெண்கள் தங்களை வருத்திக் கொள்வது தவறு. தோல்வியில்லாத வாழ்வு சுவைக்காது. அர்த்தமற்றதாகும்.
மனித வாழ்வின் தொடக்கமே தோல்வியில் இருந்துதான் தொடங்கியது. 'சுற்றும் வரை பூமி, சுடும் வரை நெருப்பு, போராடும் வரைதான் மனித வாழ்வு' என்பதை மறக்கக் கூடாது.
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், தனது சோதனை கூடம் தீப்பற்றி எரியும்போது, தன்னுடைய 24 ஆண்டு தவறுகள்தான் தீயில் எரிவதாக கூறினார். அதுபோன்ற தன்னம்பிக்கை வேண்டும்.
காதலியின் அழகை வயலின் வித்துவான் வாசித்து காட்டுவான், அதுதான் கவிதை. உளியை கொண்டு சிற்பமாக கவிதை வடிப்பான் சிற்பி. மொழியின் மூலம் வெளிப்படுவது கவிதை.
உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர் இறக்கும்போது கையில் எதையும் கொண்டு போகவில்லை என்ற வாசகத்தை கல்லறையில் எழுதி வைக்கச் சொன்னான்.
யாருடன் போட்டி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளின் மாணவர்களுடன் உங்களை ஒப்பிட்டு வளர வேண்டும் என்றார் வைரமுத்து.