ஹிதேந்திரன் இதயம் நன்றாக இயங்குகிறது: டாக்டர் மதுசங்கர்
நெல்லை: ஹிதேந்திரன் தானம் செய்த இதயம் நன்றாக இயங்குவதாக ஆபரேஷன் மூலம் சாதனை படைத்த டாக்டர் மதுசங்கர் தெரிவித்தார்.
விபத்தில் மூளை செயலிழந்து இறந்த ஹிதேந்திரன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுமி அபிராமிக்கு பொறுத்தப்பட்டது. இதை செய்த டாக்டர்கள் குழுவில் முக்கிய பங்காற்றியவர் டாக்டர் மதுசங்கர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர் டாக்டர் மதுசங்கர் கூறியதாவது
கடந்த 1994ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மூளை மரணம் ஒரு சட்டமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை இந்தியாவில் 56 பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 20 பேருக்கு நடந்துள்ளது.
டாக்டர் செரியன் தலைமையிலான எங்கள் குழு இதுவரை 14 பேருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது. மூளை மரணம் சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்தியது தமிழகம்தான். 1995ம் ஆண்டு தாம்பரத்தை சேர்ந்த மைமன்பீவி என்பவருக்கு இதயமாற்று சிகிச்சை செய்யப்பட்டது.
விபத்தில் மூளை மரணமடைந்த ஹிதேந்திரன் இதயத்தை பெங்களுரை சேர்ந்த சிறுமி அபிராமிக்கு பொருத்தினோம். சிறுமி அபிராமிக்கு ஹிதேந்திரனின் இதயம் பொருந்தி இயக்கப்பட்டது. தற்போது சிறுமி அபிராமிக்கு இதயம் நன்றாக இயங்கி கொண்டிருக்கிறது.
அபிராமியிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயம் நோய் வாயப்பட்டிருந்தது. ஆனால் இதயத்தின் வால்வுகள் நன்றாக இருந்ததால் அவை பதப்படுத்தப்பட்டு இதய வால்வு அறுவை சிகிச்சை மூலம் வேறு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹிதேந்திரனின் பெற்றோரை போல விபத்தில் சிக்கியவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அனைவரும் முன் வரவேண்டும். மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டு்ம் என்றார்.