பிறந்த நாள்: குழந்தைகளுடன் கொண்டாடிய கலாம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்த அப்துல் கலாம், பள்ளி குழந்தைகளுடன் தனது 77வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று தன்னுடைய 77வது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஜனாதிபதியாவதற்கு முன் தேசிய வேளாண் நிறுவனத்தின் (என்ஏஎப்) நிர்வாகக் குழு தலைவராக அப்துல் கலாம் இருந்தார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 கிராமங்களையும், திருவள்ளூர் மாவட்டத்தில் 20 கிராமங்களையும் வேளாண் நிறுவனம் தத்து எடுத்திருந்தது.
கிராமங்களையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் வகையில் பல திட்டங்களை வேளாண் நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அவற்றை பார்வையிட வேண்டும் என்று வேளாண் நிறுவனத்தினர் கலாமுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். சென்னை ராஜ்பவனில் தங்கி இருந்த அவர் நேற்று காலை புறப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புத்திரன்கோட்டைக்கு வந்தார்.
அங்கிருந்த கிராம மக்களை அழைத்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து குமுளி கிராமத்தில் வெட்டப்பட்டுள்ள நீர் தேக்கப் பகுதியைப் பார்வையிட்டார். அங்கு நடந்து வரும் நீர் மற்றும் நில மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி அதிகாரிகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் இல்லீடு கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள தனியார் கார்மென்ட் நிறுவனத்தை பார்வையிட்டார்.
அங்குள்ள தேசிய வேளாண் நிறுவனத்தின் ஊரக மேம்பாட்டு மையத்திற்கு சென்றார்.
அங்கு மாணவ, மாணவிகள், விவசாயிகள், வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கியில் பயிற்சி பெறும் ஊழியர்கள், பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அங்குள்ள ராமகிருஷ்ணா சேவை மைய மழலையர் பள்ளியில் கலாமின் 77வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அங்கு அவர் பள்ளிக் குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
குழந்தைகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், பொய் சொல்ல மாட்டோம், போதை பொருட்களை தொட மாட்டோம், நேரத்தை பயனுள்ளதாகக் கழிப்போம் என்று கவிதை போன்று உறுதிமொழி படித்தார் கலாம்.
அதை மாணவ-மாணவிகள் திரும்பக் கூறினர். இதைத் தொடர்ந்து பல கிராமங்களுக்கு கலாம் சென்றார். எல்லா கிராமங்களிலும் மக்கள் அவருக்கு கை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், பொது மக்கள் கலாம் செல்லும் ஊர்களில் காத்திருந்து அவரை சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.
ஆட்டோகிராப் கேட்ட மாணவர்கள், குழந்தைகளுக்கு புத்தகங்களிலும், உள்ளங்கைகளிலும் கையெழுத்திட்டு கலாம் மகிழ்ந்தார்.
ராமேஸ்வரம் பள்ளியில் விழா:
ராமேஸ்வரத்தில் கலாம் படித்த பள்ளியில் அவரது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில், கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன், பொறியாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்புகளை வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கலாம் வீட்டுக்குச் சென்ற ஆசிரியர்கள், அவரது சகோதரர் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயரைச் சந்தித்தனர். பின்னர், பள்ளி நூலகத்துக்கு ஏராளமான புதிய நூல்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளரான நுகர்வோர் இயக்கம் மற்றும் பெட்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். ஜெயகாந்தன் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், கலாம் பிறந்த தினத்தை வாசிப்பு தினமாக நுகர்வோர் இயக்கம் கடைப்பிடிக்கிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இதனைக் கடைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க அரசை வலியுறுத்த உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications