Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது: கருணாநிதி வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

Nallakannu
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் எளிமைக்கும் நேர்மைக்கும் பேர்போன பெரியவர் நல்லகண்ணுவுக்கு முதல்வர் கருணாநிதி அம்பேத்கர் விருதை வழங்கினார்.

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

அதில் நல்லகண்ணு தவிர, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு திருவள்ளுவர் விருதும், கவிதைப் பித்தனுக்கு பெரியார் விருதும், பேராசிரியர் சாரதா நம்பிஆரூரனுக்கு அண்ணா விருதும், முன்னாள் எம்எல்ஏ பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்துவுக்கு காமராஜர் விருதும், திருச்சி எம்.எஸ். வேங்கடாசலத்துக்கு பாரதிதாசன் விருதும்,

முனைவர் த.பெரியாண்டவனுக்கு திரு.வி.க. விருதும், கா.வேழவேந்தனுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதையும் கருணாநிதி வழங்கினார்.

பாரதியார் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் சவுந்திரா கைலாசம் உடல்நலம் குன்றியிருந்ததால், அவர் வரவில்லை. எனவே அவரது மகன் சடையவேல் கைலாசத்திடம் கருணாநிதி விருதை வழங்கினார்.

விருது பெற்றவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும், தங்க பதக்கமும் வழங்கப்பட்டன.

பின்னர் கருணாநிதி பேசுகையில்,

இந்த வள்ளுவர் கோட்டத்தின் அடிக்கல் நாட்டியதில் இருந்து ஒவ்வொரு அங்குலமாக வள்ளுவர் கோட்டத்தின் சுவர்களும், கட்டிடமும் வளர்ந்த நேரத்தில் எல்லாம் இங்கே ஒரு குடிசை போட்டுக் கொண்டு அதிலே தங்கி பணிகளை வேகப்படுத்தி கொண்டிருந்தவன் நான்.

ஆனால், இந்தக் கோட்டம் திறக்கப்பட்டபோது நாடு எந்த நிலையில் இருந்தது என்பதும், நாம் எல்லாம் எந்த நிலையிலே இருந்தோம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் என்னை சந்தித்து கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு விருது வழங்கியிருக்கிறீர்கள், மிக பொருத்தம் என்று சொன்னார். இப்படி சொன்னதை நல்லகண்ணு கவனிப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையில் ஒரு நல்லுறவு ஏற்பட வேண்டும்.

தியாக உள்ளம் படைத்த நல்லகண்ணுவுக்கு அம்பேத்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். அவர் வேறு கட்சியிலே சில நாட்கள் பழகிய தோஷம். பத்திரிகையிலே அவர் எழுதியிருக்கிறார். அதை நான் படித்தேன்.

அம்பேத்கர் விருது ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவருக்கு அல்லவா தர வேண்டும். நல்லகண்ணு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படி அம்பேத்கர் விருது கொடுக்கலாம் என்று ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

நான் இதிலே அம்பேத்கரை ஒரு ஜாதிக்குள்ளே, ஒரு சமூகத்திற்குள்ளே புகுத்த விரும்பவில்லை. அந்த சமூகத்திற்காக புரட்சிக்கொடி தூக்கியவர் அம்பேத்கர் என்பதிலே யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை. அதே நேரத்தில் எல்லோரையும் சமமாக மதித்தவர் அம்பேத்கர் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

நாங்கள் விருது கொடுத்திருக்கின்ற பட்டியலை பார்த்தால் கூட நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த யாருக்கும் விருது கிடையாது என்று அழித்து விட்டு நல்லகண்ணுவுக்கு மாத்திரம் விருது கொடுக்கவில்லை.

நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது. அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கவிதைப்பித்தனுக்கு பெரியார் விருது என்பதை இந்த பட்டியலை பார்த்தாலே நாங்கள் யாரையும் புறக்கணிக்கவில்லை, அலட்சியப்படுத்தவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நல்லகண்ணு ஆதிதிராவிட மக்களும், அல்லாத மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒன்று பட்டு சமுதாய பணியாற்ற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக போராட வேண்டும். உழைக்க வேண்டும் என்று கருதுகிற கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவர்.

இங்கே ஒன்பது பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒன்பது லட்ச ரூபாய் இன்றைக்கு விருதுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் புத்தகங்களை எழுதியவர்கள் 29 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தான் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் என்பதை ஒரு அரசு கொடுக்கிறதே, முதலமைச்சர் கொடுக்கிறாரே என்ற ஒரு மரியாதைக்காக அவர்கள் வாங்கியிருப்பார்கள் என்று கருதுகிறேன்.

அது அவர்களுக்கு பத்தாத பணம் தான் என்பது எனக்கு தெரியும். எனவே அடுத்த ஆண்டு முதல் அல்ல, இந்த ஆண்டே இன்னொரு பத்தாயிரம் ரூபாய் வீதம் அவர்களுக்கு சேர்த்து வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல பதிப்பகங்களுக்கு தற்போது ஒரு புத்தகத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் ஒரு புத்தகத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும். இந்த வாரத்திற்குள்ளேயே இந்தக் கூடுதல் தொகையும் அளிக்கப்படும் என்றார் கருணாநிதி.

இந்த விழாவில் தமிழுக்காக பணியாற்றி, 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் ரூ. 12,000க்கு மிகாமல் உள்ள சி.சா. சிதம்பரம், எம்.அழகர்சாமி, பரந்தூர் இராமசாமி, தங்கசங்கரபாண்டியன், நா.பாளையம், ம.கேசவன், ந.குமாரவேலன், தா.வீ.பெருமாள், பாரதி அப்பாசாமி, அ.நவநீதன், எஸ்.எஸ்.மரி, ப.தட்சிணாமூர்த்தி ஆகிய முதிர்ந்த தமிழறிஞர்கள் 12 பேருக்கு மாதம் ரூ. 1,000 நிதியுதவி வழங்குவதற்கான உத்தரவுகளையும் கருணாநிதி வழங்கினார்.

அகரமுதலி வரலாறு:

தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் சார்பாக, செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி 12 மடங்களில் 31 பகுதிகளாக தொகுத்து வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் தற்போது ம' ய' மற்றும் வ' எழுத்துக்களில் தொடங்கும் 6 பகுதிகளும், தமிழில் அகராதிகள் உருவான வரலாறு, வகைகள், வெளியீடுகள் மற்றும் பல செய்திகள் கொண்ட தமிழ் அகரமுதலி வரலாறு' என்ற பகுதியையும் ஆக மொத்தம் 7 பகுதிகளையும் கருணாநிதி வெளியிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+