பொங்கல் தூத்துக்குடியில் மஞ்சள் விளைச்சல் அமோகம்!
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையின்போது பானையில் வைத்துக் கட்டப்படும் மஞ்சள் அமோக விளைச்சலைக் கண்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது கரும்பு, மஞ்சள்குலை, பழம் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மஞ்சள் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராகி வருகிறது. இந்த வாரம் முதல் மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு வர உள்ளன. பொதுவாக இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும்
மஞ்சள் தூத்துக்குடிக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி தூத்துக்குடி மஞ்சள் டெல்லி, சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து ஒரு விவசாயி கூறுகையில், புதுக்கோட்டை வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதற்கான விதை மஞ்சள் ஆலங்குளம் அருகேயுள்ல சிவலூரில் இருந்து வாங்கி வரப்படுகிறது. ரூ.15க்கு வாங்கி இந்த சுற்று வட்டாரத்தில் பயிரிடப்படுகிறது.
தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் மஞ்சள் குலைகள் விளைச்சல் கிடைக்கும். ஒரு மஞ்சள் குலை உற்பத்திக்கு ரூ.3 செலவாகிறது. இதனால் ரூ.4 முதல் 5 வரை ஒரு மஞ்சள் குலை விற்பனை செய்யப்படும்.
இங்கு விளையும் மஞ்சள் பொங்கல் பண்டிக்கைக்கு விற்பனைக்கு போக மீதம் உள்ள மஞ்சள் குலைகள் அனைத்தும் சென்னை மற்றும் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது என்றார்.