சென்னை பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் தலாய் லாமா
சென்னை: புத்த மதத்தலைவர் தலாய் லாமா உலக அமைதி மற்றும் மகிழ்ச்சி என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் 21ம் தேதி உரையாற்றுகிறார்.
வரும் 20ம் தேதி பாண்டிச்சேரி வரும் புத்த மதத்தலைவர் தலாய் லாமா மறுநாள் சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு அமைதியும் மகிழ்ச்சியும்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் அளித்த பேட்டி:
நாளை சென்னை பல்கலைக்கழகத்தின் 151-வது பட்டமளிப்புவிழா நடக்கிறது. இதில் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை தாங்குகிறார். இணைவேந்தரும், உயர்கல்வி அமைச்சருமான கே.பொன்முடி முன்னிலை வகிக்கிறார். உ.பி மாநில கவர்னர் டி.வி.ராஜேஸ்வர் பட்டமளிப்புவிழா உரை நிகழ்த்துகிறார்.
இந்த விழாவில், சந்திரயான்-1 திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, எலும்புமுறிவு டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. 76 பேர் தங்கப் பதக்கம் பெறவிருக்கிறார்கள். 287 பேருக்கு பி.எச்டி. பட்டம் அளிக்கப்படுகிறது. இவ்விழாவில் மொத்தம் 40,575 பேர் பட்டம் பெறுகிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் 415 பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகம் 7வது இடத்தில் இருக்கிறது. அதேபோல், ஆராய்ச்சி மற்றும் புத்தக வெளியீட்டு பணியில் சிறந்த 35 பல்கலைக்கழகங்களில் 15வது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி. உள்ளிட்டவை இதற்கு அடுத்தபடியாகத்தான் இருக்கின்றன.
பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைப்படி, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:10 இருக்க வேண்டும். ஆனால், சென்னை பல்கலைக் கழகத்தில் அதைவிட சிறப்பாக 1:8 என்ற அளவில் இருக்கிறது. லக்னெள பல்கலைக்கழகத்தில் 80 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார்.
கட்டிட வசதி மற்றும் ஆய்வக வசதிகளை மேம்படுத்த பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம், கிண்டி, தரமணி ஆகிய வளாகங்களில் ரூ.100 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. முதல்கட்டமாக கிண்டி வளாகத்தில் இன்னும் 2 மாதத்தில்
கட்டிப்பணி தொடங்கப்படும். அனைத்து ஆய்வகங்களும் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மேம்பாட்டு பணிகளுக்காக மத்திய அறிவியல் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை, பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய திட்டக்குழு உள்பட வெவ்வேறு அமைப்புகள் இந்த ஆண்டு ரூ.60 கோடிக்கு அனுமதி வழங்கியுள்ளன என்றார் ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications