இலங்கை தமிழர்களுக்காக தீ குளித்த முத்துக்குமாருக்கு மணி மண்டம்!
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கம் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த யுத்தத்தில் அப்பாவி தமிழ் மக்கள் தினசரி பல நூறு பேர்கள் பலியாவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அங்கு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே போன்று பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் உடனே போர் செய்ய வேண்டும் என்றும், அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரி முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக் குளித்து உயிர் நீத்தார்.
முத்துக்குமாரின் அஸ்தி சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொழுவை நல்லூருக்கு ஊர்வலமாகக் கொண்டு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு முத்துக்குமாரின் அஸ்தி அவரது பாட்டி லிங்கபுஷ்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைக் கண்டு அங்கு கூடியிருந்த அவரது உறவினர்களும், பொது மக்களும் கதறி அழுதனர்.
இதன் பின்னர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அங்கு பொதுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் வணிகர் சங்கப் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன், மதிமுக நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், இலங்கைத் தமிழர்களுக்காக தீ குளித்து உயிர் நீத்த முத்துகுமாருக்கு மணி மண்டபம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.