காந்தி கடிகாரம், கண்ணாடி ஏலம்-உயர்நீதிமன்றம் தடை
டெல்லி: தேசப்பிதா காந்தி பயன்படுத்திய கண்ணாடி, கடிகாரம் உள்ளிட்ட நினைவு பொருட்களை ஏலம் விடுவதற்கு உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவரிடம் காந்தியடிகள் பயன்படுத்தி வட்ட மூக்குக் கண்ணாடிகள், பாக்கெட் கடிகாரம், அவர் பயன்படுத்திய சந்தன செருப்பு போன்றவை உள்ளன. இதை அவர் நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்டிகோரம் என்ற ஏல நிறுவனத்தின் மூலம் நாளை ஏலம் விடப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காந்தியின் பிறந்த குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள நவஜீவன் அறக்கட்டளை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த ஏலத்துக்கு தடை விதிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நவஜீவன் அறக்கட்டளை வக்கீல் மோகன் பராசரன் அந்த மனுவில்,
காந்தியின் நினைவு பொருட்கள் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவின் சொத்தாகும். எனவே இதை ஏலம் விடக் கூடாது.
நவஜீவன் அறக்கட்டளை மகாத்மா காந்தியால் 1929ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அவருக்கு பின் அவரது நினைவு பொருட்களை சொந்த கொண்டாடும் உரிமை நவஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என காந்தி உயில் எழுதி வைத்துள்ளார்.
அவரது பொருட்களை ஏலம் விட வேண்டாம் என ஆன்டிகோரம் நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனில்குமார், மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடத் தடை விதித்தார்.
இதேபோல் கடநத் 1996ம் ஆண்டு மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை இங்கிலாந்து நிறுவனம் ஏலம் விடப்போவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அந்த ஏலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.