புதுச்சேரி: திருமணத்திலிருந்து தப்பிய சிறுமி!
புதுச்சேரி: புதுச்சேரியில் துணிச்சலாக செயல்பட்ட 15 வயது சிறுமி மகளிர் ஆணையத்தின் உதவியுடன் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மல்லிகா (15) ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இவரது குடும்ப ஏழ்மையை தனக்கு சாதமாக பயன்படுத்து கொண்ட 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் மல்லிகாவின் பெற்றோரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவரது பெற்றோரும் பெண் பிள்ளையை கரைசேர்க்க நினைத்து அவருக்கு திருமண வேலைகள் துவக்கி உள்ளனர். இதற்கு மல்லிகா மறுப்பு தெரிவித்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து மல்லிகா தனக்கு நீதி வழங்க கோரி மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட மகளிர் ஆணையம் கட்டாய திருமணத்தில் இருந்து அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளது.
இது குறித்து மகளிர் ஆணையத் தலைவர் கமலினி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரியை சேர்ந்த அந்த சிறுமிக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆசிரியர் ஆக வேண்டும் என விரும்புகிறாள். ஆனால், அவள் வீட்டார் அவளை படிக்க வைக்க மறுத்து திருமணம் செய்ய முயன்றுள்ளார்கள். இந்த திருமணம் குழந்தைத் திருமணச் சட்டப்படி குற்றமாகும்.
எனவே அந்தச் சிறுமியின் பெற்றோரைக் காவல் நிலையத்திற்கு அழைத்து, அவர்களின் செயலில் உள்ள சட்ட ரீதியான தவறுகளை விளக்கிக் கூறினோம். அதன் பிறகு, அவர்கள் தங்கள் மகளைத் திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த சிறுமி பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறார். அந்த சிறுமியின் எதிர்காலக் கல்விச் செலவை மகளிர் ஆணையமே ஏற்க முடிவு செய்துள்ளது என்றார்.