திருமணத்தை நிராகரித்த துணிகர சிறுமி - பிரதீபா பாட்டீல் பாராட்டு
டெல்லி: 12 வயதில் தன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியும், துணிச்சலாக போராடி திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமி. இதைக் கேள்விப்பட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அந்த சிறுமியை டெல்லிக்கு வரவழைத்துப் பாராட்டினார்.
மேற்கு வங்காள மாநிலம் புருசியா மாவட்டம் ஜகல்தா பகுதியில் உள்ள மலைவாழ் பகுதியை சேர்ந்தவள் ரேகா கலிந்தியா (12). இங்கு வாழும் பழங்குடியினப் பெண்களுக்கு 12 வயதிலேயே ஏலத்தில் விட்டு கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.
அதன்படி ரேகாவையும் ஏலத்தில் விட்டு கல்யாணம் செய்து வைக்க முடிவானது. ஆனால் ரேகா திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
பிடிவாதமாக இருந்து திருமணத்தை நிறுத்தி விட்டார் ரேகா. இந்த செய்தியைப் படித்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அந்த சிறுமியின் துணிச்சலை பாராட்ட முடிவு செய்து தனது சிறப்புச் செயலாளர் அர்ச்சனா தத்தா மூலம் ரேகாவை டெல்லிக்கு அழைத்து வர உத்தரவிட்டார்.
இதையடுத்து ரேகா குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். கழிப்பறை, மின்சார வசதி கூட இல்லாத குடிசையில் வாழ்ந்து வரும் ரேகா, குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரமாண்டத்தைப் பார்த்து வியந்து போய் விட்டார்.
தன்னை சந்தித்த ரேகாவை, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பாராட்டினார். அப்போது அவரிடம், நான் ஆங்கிலம் படிக்க விரும்புகிறேன். படித்து முடித்து நல்ல வேலை பார்க்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ரேகா.












Click it and Unblock the Notifications