தமிழர் மனதை வென்றுவிட்டீர்கள்-நார்வே தமிழர்கள்

அந்த கடிதத்தில்,
களத்திலும் புலத்திலுமாக நொந்து போய்க் கிடக்கிறது ஈழத்தமிழினம். குறிப்பாக வன்னியின் குறுகிய நிலப்பரப்பு ஒன்றினுள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் இனம் வகைதொகையின்றிக் கொன்றழிக்கப்படுகின்றது. ஏன் எனக் கேட்பார் எவருமின்றி இனக்கருவறுப்பு மூர்க்கம் பெறுகின்றது.
கண்டும் காணாதது போல் மௌனித்து வாழாதிருக்கின்றன உலகநாடுகள். அறிக்கைகளில் மட்டும் ஆதங்கப்படுகிறார்கள் சில அரசியல் தலைவர்கள். நாங்களும் இலட்சக்கணக்கில் உலக வீதிகளை போராட்டங்களால் உலுப்பினாலும் சில வரையறைகளை மீறமுடியாது கைபிசைந்து நிற்கிறோம். எவருமே எமக்காக குரல் தருவதாய் இல்லை.
இந்த நிலையில் தான், அடர்த்தியான இருட்போர்வையின் ஒரு மூலையில், நம்பிக்கை ஒளிக்கீற்றாய் தங்கள் முகம் தெரிகிறது. ஒரு நம்பிக்கை அசரீரியாய் திரும்ப திரும்ப தங்கள் குரல் எம் காதுகளில் எதிரொலிக்கிறது.
ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாய் மடியும் போதும் தம் அரசியல் இருப்பிற்காய் அமைதி காப்பவர்கள், அரசியல் அரங்கங்களில் அவ்வப்போது பாத்திரம் மாறும் வேடதாரிகள் ஆகியோர் மத்தியில் தாங்கள் தனித்துவமான, துணிந்த அரசியல் தலைவர் என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
'தமிழ் மக்களுக்கு தனி ஈழம் தான் ஒரே தீர்வு", 'அவர்களுக்கு நான் தனி ஈழம் அமைப்பேன்" என்ற உறுதியான தங்கள் உரை எம் காதுகளை நிறைக்கிறது. திரும்ப திரும்ப மேடைகளில் தாங்கள் இதை வலியுறுத்தும் போதெல்லாம் எம் நோக்காட்டிற்கு ஒத்தடம் கிடைப்பதாய் உணர்கிறோம்.
புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் தலைமையில் தாங்கள் வளர்ந்த பாசாறை அப்படிப்பட்டது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும், போராளிகளுக்கும் எவ்வகையான பேருதவியை புரட்சித் தலைவர் வழங்கினார் என்பது ஒவ்வொரு ஈழத் தமிழன் நெஞ்சிலும் பசுமரத்தாணியாய் பதிந்திருக்கிறது.
அவரின் தாய்மை உணர்வையும், தன்னலமற்ற சேவையையும், கொள்கை உறுதிப்பாட்டையும் தங்களிலும் காண்கின்றோம். அதனால் தான் இத்தனை இடர்களைக் கடந்தும் தமிழர் மனங்களை வென்றுள்ளீர்கள். தங்களின் இந்த உணர்வும், உறுதியும் மேலும் வலுப்பெறும் நிலைக்கும் என்று திடமாக நம்புகிறோம்.
உடனடியாக ஒரு யுத்த நிறுத்தம் ஏற்பட்டு எம் மக்கள் உயிர்கள் காக்கப்படவும், நீதியானதும் நிரந்தரமானதுமான ஒரு தீர்வு எட்டப்படவும் தாங்கள் விரைந்து பங்களிக்க வேண்டும் என உரிமையோடு எதிர்பார்க்கின்றோம்.
அந்த வகையில் தங்கள் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்க எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிகளைப் பெற வேண்டும் என நார்வேயில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம். தமிழர் வரலாற்றில் தங்கள் பெயர் நிலைக்கும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications