ஜெ.க்கு நன்றி-பிரிட்டிஷ் தமிழர் பேரவை
லண்டன்: தனி ஈழம் அமைப்பேன் என்ற அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவின் ஆணித்தரமான பேச்சுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை தங்களது நன்றியை தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் தமிழர் பேரவை ஜெயலலிதாவுக்கு அனுப்பிய கடிதத்தில்,
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரிட்டிஷ் தமிழர்களும் இணைந்து வரவேற்கின்றனர். அத்துடன் இது எம்மை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் 6 கோடிக்கும் மேற்ப்பட்ட மக்களின் முதலமைச்சராக இரண்டு தடவைகள் இருந்த தழிழ் தலைவியின் இந்தக் கூற்று மிகமுக்கியமானதாக கருதப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
தமிழர்களின் கோரிக்கைகளுக்கு நீண்ட காலமாக உணர்வுபூர்வமாக ஆதரவளித்து வரும் தமிழகத்தின் தமிழ் தலைவர்களுக்கு எமது நன்றிகளை வெளிப்படுத்தும் இதேவேளை, தமிழரின் போராட்டம் மிக முக்கியமான காலகட்டத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட இந்த கருத்து எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
இந்தநிலையில் சர்வதேச அரசுகளும், ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச நிறுவனங்களும் அமைப்புக்களும் அதிமுக தலைவியின் இந்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழர்களுக்கு நீதியையும், இலங்கையிலும் தெற்காசியாவிலும் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருமாறு பிரிட்டிஷ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுகின்றது என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.