தென் தமிழகத்தில் மழை-மீண்டும் களைகட்டுது குற்றாலம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, அச்சன்கோவில், தமிழகத்தில் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, பாபநாசம் ஆகிய மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
ஐந்தருவியில் காலை முதலே ஐந்து கிளைகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியது. மெயின் அருவியில் காலை 11 மணியளவிலும், புலியருவியில் மாலை 4 மணியளவிலும் தண்ணீர் வரத்து தொடங்கியது.
கடந்த 10 தினங்களாக வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் விழுந்து வருவதால் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இம்மழை தொடர்ந்து பெய்தால்தான் சீசன் களை கட்டும். ஒரிருநாள் மட்டும் மழை பெய்து பின் அருவியில் தண்ணீர் இல்லாமல் மீண்டும் வறண்டுவிட கூடாது என்பதற்காக வியாபாரிகள் வருண பகவானை வேண்டி வருகின்றனர். காப்பாற்றுவாரா வருண பகவான்...