விமானத்தில் 2 கருப்புப் பெட்டிகளை நிறுவ நெல்லை விஞ்ஞானி யோசனை
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் இதுகுறித்துக் கூறியதாவது...
கடந்த மே 31ம் தேதி பிரேசில் நாட்டில் உள்ள ரீயோடி ஜெனிரோ நகரில் இருந்து கிளம்பிய ஏர் பிரான்ஸ் ஏர்பஸ் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்ந்து மூழ்கியது. இந்த விபத்து நடந்து சுமார் மூன்று வாரங்கள் ஆகியும் விபத்துக்கான காரணம் என்ன, என்பது இன்னும் அறியபடவில்லை.
விபத்து குறித்து தகவல் கொடுக்கும் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைக்காததால், மீட்பு பணிகளை முழுமையாக செய்ய முடியாமலும் பிரான்ஸ் அரசு தவித்து வருகிறது.
கருப்பு பெட்டி...
விமானத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று தான் இந்த கருப்பு பெட்டி. இதன் பெயர் கருப்பு பெட்டி என்றிருந்தாலும் அது கரும் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். பொதுவாக இது 19.6 அங்குலம் நீளமும், 4.8 அங்குலம் உயரமும் கொண்டதாக இருக்கும் இந்த கருப்பு பெட்டி வி்மானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
இதில் விமானத்தில் கடைசியாக நடந்த 2 மணி நேர உரையாடல்கள், இன்ஜின்களின் உள்ளிட்ட விமான கருவிகளின் சத்தங்கள் ஆகியவை பதிவாகி இருக்கும். உறுதியான உருக்கு மற்றும் டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட இந்த கருப்பு பெட்டி எத்தகைய விபத்திலும் சேதம் ஏற்படாதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இது பூமியின் ஈர்ப்பு சக்தியை விட 3 ஆயிரத்து 500 மடங்கு அதிக ஈர்ப்பு சக்தியை தாங்க கூடியது. எனவே எவ்வளவு வேகத்தில் எந்த இடத்தில் விழுந்தாலும் உடையாது. லேசான சேதம் கூட ஏற்படாது. மிக அதிகமாக வெப்பத்தையும் தாங்க கூடியது.
கருப்பு பெட்டியின் ஒரு பகுதியில் சிறிய குழாய் போன்ற பிஞ்சா என்ற கருவி பொருத்தப்பட்டு இருக்கும். கருப்பு பெட்டி தண்ணீருக்குள் விழுந்தால் இது சத்தம் எழுப்ப ஆரம்பித்து விடும். தொடர்ந்து 30 நாட்கள் சத்தம் எழுப்பி கொண்டே இருக்கும்.
இதில் இருந்து வெளியாகும் சிக்னல் 20 ஆயிரம் அடி தூரம் வரை செல்லும். கருப்பு பெடடி விழுந்து கிடக்கும் இடத்தை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக அதில் இத்தகைய பேட்டரி 90 நாட்கள் வரை இயங்கும். அதன் பிறகு செயலிழந்து விடும்.
கருப்பு பெட்டியை மீட்பதில் சிரமங்கள்...
கடலுக்கு அடியில் நீரின் வெப்பம் 104 டிகிரியாகவும், அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கும் 7 ஆயிரம் பவுண்டாக இருப்பதால் அத்தனை ஆழத்தில் உள்ள கருப்பு பெட்டியை நீச்சல் வீரர்கள் முலமாகவோ, சாதாரண நீர் மூழ்கி கப்பல் மூலமாகவோ மீட்டு வருவது முடியாத ஓன்றாகும்.
எனவே கடல் மட்டத்திலிருந்து கேபில் இணைப்புடன் கூடிய ரி்மோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய நீர்மூழ்கி வாகனத்தை இயக்கி கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் முலம் அதை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கருப்பு பெட்டி கையில் கிடைத்தால்தான் விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.
இரட்டை கருப்பு பெட்டி முறை...
விமானத்தின் வெளிபகுதி, உள்பகுதியில் நடக்கும் ஆடியோ, வீடியோ சிக்னல்களை கருப்பு பெட்டியில் பதியும்போது அதன் நகலை பிரத்தியோகமாக டிரான்ஸ்மீட்டர் சேட்டிலைட்டுக்கு அனுப்பி அங்கிருந்து டிஷ் ஆண்டினா வழியாக கணிப்பொறி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முறை செயல்பாட்டிற்கு வரும்போது விபத்து நடந்த இடத்திற்கு வெகுவிரைவாக சென்று மக்களை காப்பாற்றலாம். விமான பயணம் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு பெரிய, புதிய தொழில்நுட்பங்கள் தேவையில்லை.
சற்று மறுசீரமைப்பு தேவை. இரட்டை கருப்பு பெட்டி முறை செயல்பாட்டை உடனே கொண்டு வர அனைத்து அறிவியல் ஆர்வலர்கள் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும் என்கிறார் பாலசுப்ரமணியன்.
நெல்லை மாவட்ட விஞ்ஞானி...
பாலசுப்பிரமணியன் 1979ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் டிஇஇ படித்து வந்தார். இவர் மோட்டார்களுக்கு காயில் சுற்றும் தொழில்தான் செய்து வருகிறார்.
பாலசுப்பிரமணியன் அதிநவீன வாக்குபதிவு இயந்திரம் ஒன்றையும் கண்டிபிடித்துள்ளார். இந்த இயந்திரம் மூலம் எந்த கிராமத்தில் ஓருவர் வாக்களித்தாலும் அதனை டெல்லியில் இருந்து கண்காணிக்கலாம்.
இதுகுறித்து 2005ம் ஆண்டு இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதனை அவர் அலுவலகம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் இவரை கண்டு கொள்ளவில்லை.
அதேபோல் அணுசக்தி, பெட்ரோலியம் ஆகிய இரு பொருட்களுக்கு இடையே உள்ள ஒரு பொருள் மூலமும் மின்சாரம் தயாரிக்கலாம் என்பதையும் கண்டுபிடித்து டெல்லி என்ஆர்டிசி (தேசிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம்) ஆய்வு சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட கிராமத்து இளைஞரின் சாதனையை வடக்கு ஏற்றுக் கொள்ளுமா...பொறுத்திருந்து பார்ப்போம்...?













Click it and Unblock the Notifications