வங்கதேச பெண்ணுக்கு 200 கசையடி-கவலைக்கிடம்
டாக்கா: வங்கதேசத்தில் விதவைப் பெண் ஒருவருக்கு 200 கசையடிகளும், ஆண் ஒருவருக்கு 101 கசையடிகளும் தரப்பட்டது. இதில் படுகாயமுற்ற அந்தப் பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருவரும் தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள கயார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவ்ரகள். அந்தப் பெண்ணுக்கு 40 வயதாகிறது. அவரது பெயர் பியாரா பேகம். ஆணின் பெயர் மமும் மியா. 25 வயது வாலிபர்.
இருவரும் சட்டவிரோதமாக செயல்பட்டதாக கூறி ஊர்த் தலைவர்கள் கூடி இந்த கடுமையான தண்டனையை விதித்தனர்.
இதையடுத்து ஊர் மக்கள் முன்னிலையில் நேற்று இரவு இருவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
அப்போது வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மதத் தலைவர் மெளலானா முகம்மது மனிரூல் இஸ்லாம் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.