ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
ராமேசுவரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாம் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்துக்களின் புண்ணிய தலங்களில் ஒன்று என்பதால் இங்கு பல மாநில பக்தர்கள் வந்து தீர்த்தமாடி செல்கின்றனர்.
இந்நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை காலை சுமார் 9.50 மணிக்கு நடைபெறுகிறது. பிள்ளையார்பட்டி சர்வசதாகம் பிச்சை குருக்கள் தலைமையில் 28 வேத விற்பன்னர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
முன்னதாக கோவில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்தநிலையில் கடந்த 28ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று காலை 8.40 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது. ஐந்தாம் கால பூஜை மாலை 5.30 மணிக்கும், ஆறாம் கால பூஜை நாளை காலையும் நடக்க இருக்கின்றன.
கடைசியாக இங்கு கடந்த 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. அடுத்த கும்பாபிஷேகம் 2013ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் உள்ள யாழி நான்கு ஆண்டுகளுக்கு முன் கீழே விழுந்து சேதமானது.
இதையடுத்து அவை ரூ. 23 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, தற்போது கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து சிறப்பு ரயில்...
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. இது நாளை காலை 5.30 மணிக்கு கிளம்பி 8.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும்.