ஆப்ரிக்கா செல்லும் செங்கோட்டை மீட்டர்கேஜ் ரயில் என்ஜின்கள்
டான்சானியா, சூடான், லிபியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற ஆப்ரிக்க நாடுகளுக்கு இந்திய ரயில்வே தான் ரயில்வே என்ஜின்களை சப்ளை செய்து வருகிறது.
இந்தியாவில் ஓடிய மீட்டர்கேஜ் ரயில் எஞ்சின்கள் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, வண்ணங்கள் பூசப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
தற்போது தமிழக்த்தின் செங்கோட்டையில் இருந்து கேரளாவின் புனலூருக்கு தற்போது மீட்டர்கேஜ் பாதையில் நான்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவி்ல் பிராட்கேஜாக மாற்றப்பட இருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இதன் பணிகள் நிறுத்தப்படுகின்றன.
எட்டு கண், பதிமூன்று கண் பாலங்களையும், கல்லடா ஆற்றின் மீது மக்களை சுமந்து இயற்கை எழிலை தாங்கி பயணித்த இந்த என்ஜின்களுக்கு அதன் பின்னர் வேலையில்லாமல் போய்விடும்.
இதையடுத்து இந்த என்ஜின்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆப்ரிக்காவுக்கு செல்லவிருக்கிறது. இந்த என்ஜின்கள் தங்களுக்கு வேண்டும் என கேட்டு பல ஆப்ரிக்க நாடுகள் தற்போதே முன்பதிவு செய்து காத்துகிடக்கின்றனவாம்.
இதற்காக இந்திய ரயில்வே ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொழில்நுட்ப வல்லுநர்களையும், பொறியாளர்களையும் பராமரிப்பு பணிக்காக ஆப்ரிக்க நாடுகளுக்கு அனுப்புகிறது.