காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை வேண்டாம்-தரூர்
டெல்லி: தேசப்பிதா மகாத்மாக காந்தியை கௌரவிக்கும் வகையில் இந்தியர்கள் அவரது பிறந்த நாளன்று விடுமுறை எடுத்து கொள்ளாமல் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும் என வெளியுறவு துறை இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தி...
மகாத்மா காந்தி அவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என கூறியவர். ஆனால் அவரது பிறந்த நாளன்று நாம் வேலை பார்க்காமல் விடுமுறை கொண்டாடுகிறோம்.
அவரும் தனது பிறந்தநாள் தனக்கு கொள்கைகளை எடுத்து கூறுவதாக இருக்க வேண்டும், சாதாதரண சம்பிரதாயமாக மாறக் கூடாது என கூறியிருக்கிறார். அதனால் அவரது பிறந்த நாள் தினத்தில் நாம் கூடுதலாக உழைக்க வேண்டும். அவரது கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
வியாட்நாமில் அந்நாட்டு விடுதலைக்காக போராடிய ஹோ சி மிங்கின் பிறந்தநாள் தேசிய தினமாக கொண்டாடப்பட்டுள்ளது. அவரை கெளரவிக்கும் வகையில் அன்று வியட்னாமியர்கள் கூடுதலாக உழைக்கின்றனர். அதை அவர்கள் பெருமையாகவும் கருதுகிறார்கள் என்று கூறியுள்ளார் தரூர்.
இந்தக் கருத்தைக் கூறிய கையோடு, எனது இந்தக் கருத்தை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார் தரூர்.
காரணம், அவர் சமீபத்தில் தெரிவித்த விமானங்களில் உள்ள எக்கானமி வகுப்பு மாட்டுத்தொழுவம் என்றும், வேலைப்பளு கேலிகூத்து எனவும் கூறியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது என்பது நினைவிருக்கலாம்.