தெருவில் திரியும் நாய்களைப் பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை!
சென்னை: சென்னை மாநகரில் பல்கிப் பெருகிப் போய் விட்ட தெரு நாய்களால் பெரும் சிரமங்கள் ஏற்படுவதால் அவற்றைப் பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் இடம் பெற்ற கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும், மேயர் மா.சுப்ரமணியம் அளித்த பதில்களும்...
புவனேஸ்வரி: சென்னையில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. அதனை பிடிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படுமா?
மேயர்: சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை நாள்தோறும் பிடிக்கப்பட்டு ப்ளூ கிராஸ் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அந்நாய்களுக்கு இனக்கட்டுபாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் அதே பகுதியில் விடப்படுகிறது.
உஷா (தேமுதிக): சமீபத்தில் பெய்த மழையால் வடசென்னையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா?
மேயர்: அனைத்து மண்டலங்களிலும் கொசு புழு கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவி (சிபிஎம்): தி.நகர் உஸ்மான் சாலை மற்றும் ரங்கநாதன் தெருவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் எத்தனை? மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்ன?
மேயர்: 2007க்கு பின்னர் உஸ்மான் சாலையில் அனுமதியற்ற கட்டிடம் ஒன்று; விதிமுறையை மீறி கட்டிப்பட்ட கட்டிடம் மூன்று.
ரங்கநாதன் தெருவில் அனுமதியற்ற கட்டிடம் இரண்டு; விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இரண்டு. இவைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், இடிப்பதற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குப்பன் (திமுக): குடிசை மாற்று வாரியத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணியை மாநகராட்சி எடுத்து நடத்துமா?
மேயர்: கழிவுநீர் அகற்றும் பணியினை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தனியாக செயல்படுத்தி வருகிறது. அதனால் மாநகராட்சி அதனை எடுத்து நடத்த முடியாது என்று மேயர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications