திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 10 நாள் நடைபெறும் திருவிழாவில் இங்குள்ள மலையே சிவனாக கருதி வழிபடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவின் இறுதி நாளான இன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதற்காக இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அதிகாலை 4 மணிளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் சரியாக மாலை 5.56 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் பலிபீடம் அருகே அழைத்து வரப்பட்டன். கோவிலில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே பலி பீடத்தின் அருகே வந்தார்.
அதைத் தொடர்ந்து பலி பீடம் அருகே உள்ள அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கி வழிபட்டனர்.
இதே நேரத்தில் திருவண்ணாமலையில் உள்ள வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
முன்னதாக 2,668 மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக தயார் நிலையில் வைத்து இருந்த மகாதீப கொப்பரையை நேற்று காலை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1,500 மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் ஆகியவை கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது.
தீபத் திருவிழாவுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்திருந்தனர். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருவண்ணாமலையைப் போல தமிழகம் முழுவதும் மக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அகல் விளக்குகள், மெழுகு வர்த்தி தீபம் என விதம் விதமான விளக்குகள் ஏற்றப்பட்டு ஜோதி மயமாக காணப்பட்டது.