விபச்சாரத்தை தடுக்க முடியாவிட்டால் சட்டப்பூர்வமாக்கி விடலாமே - சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: விபச்சாரத்தை உங்களால் தடுக்க முடியாவிட்டால், ஒழிக்க முடியாவிட்டால் பேசாமல் அதை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரித்து விடலாமே. இதன் மூலம் அதை கட்டுக்குள் கொண்டு வந்து கண்காணிக்க முடியுமே என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் ஆகியோர், அரசு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்திடம், உலகின் பழமையான தொழிலான விபச்சாரத்தை உங்களால் தடுக்க முடியவில்லை என்கிறீர்கள். சட்டத்தால் அதைத் தடுக்க முடியவில்லை என்கிறீர்கள். அப்படியானால் அதை ஏன் சட்டப்பூர்வமாக மாற்றி விடக் கூடாது?
அப்படிச் செய்வதன் மூலம், இந்த செக்ஸ் வர்த்தகத்தை முறையாக கண்காணிக்க முடியும். அதில் ஈடுபடும் பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த முடியும். மருத்துவ சிகிச்சைகளைத் தர முடியும்.
பெண்கள் கடத்தப்படுவது, விபச்சாரத்தில் தள்ளப்படுவது போன்ற செயல்களைத் தடுக்க அதை பேசாமல் சட்டப்பூர்வமாக்கி விடலாம்.
கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் விபச்சாரத்தைத் தடுக்க முடியும் என்று கூறுவதை ஏற்க முடியாது. காரணம் உலகில் எங்குமே அப்படி நடந்ததில்லை.
விபச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்து விட்டவர்கள் ஏதாவது ஒரு வழியில் ஈடுபடத்தான் செய்கிறார்கள். ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியில் போய் விடுகிறார்கள். சிலர் மிகவும் ஆடம்பரமாக இந்தத் தொழிலை நடத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம். சட்டம் போட்டெல்லாம் இதைத் தடுக்க முடியாது. எனவே இதை ஏன் பேசாமல் சட்டப்பூர்வமான தொழிலாக மாற்றக் கூடாது? என்றனர்.
இதற்குப் பதிலளித்த கோபால் சுப்ரமணியம், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும்,அரசிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.