ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்த கிணறுகள் திடீர் மூடல் - பக்தர்கள் கடும் எதிர்ப்பு
இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஸ்தலம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், இதனால் இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி பல நூறு பக்தர்கள் வந்த வணம் உள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜை செய்து, அக்னி தீர்த்தக் கடலில் நீராடிய பின்னர், கோயிலுக்குள் சென்று அங்கிருக்கும் 22 புனிதத் தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அப்போது, பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் 22 தீர்த்தங்களிலும் நீராட சென்றனர்.
அப்போது, 2 முதல் 6 வரை உள்ள சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் ஆகிய 5 தீர்த்தக் கிணறுகள் மூடப்பட்டிருந்தன.
இதனால் அந்த தீர்த்த கிணறுகளில் பக்தர்களால் நீராட முடியவில்லை. மற்ற 17 தீர்த்தங்களில் மட்டுமே நீராட அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயில் நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோடு, கோயில் நிர்வாகத்தினரிடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.
இது குறித்து கோயில் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது, விடுமுறை காலம் என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால், குறிப்பிட்ட 5 தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடிவிட்டு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே தான், அந்த கிணறுகளை மூடி வைத்தோம். இனிவரும் காலங்களில் கூட்டத்தைச் சமாளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார்.