ஜப்பான் கவிஞர் டாக்டர் டைசகு இகேடாவுக்கு உலக அமைதி கவிஞர் விருது

சென்னையில் நடைபெறவுள்ள கவிஞர்கள் மாநாட்டின்போது இந்த விருது இகேடாவுக்கு அளிக்கப்படுகிறது.
இகேடா, கண்டங்களுக்கிடையிலான உலக கவிஞர் சமூகத்தின் காப்பாளராக இருக்கிறார். ஆகஸ்ட் 7ம் தேதி சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியின்போது இகேடாவுக்கு உலக அமைதி கவிஞர் விருது அளிக்கப்படும்.
டோக்கியாவுக்கு அருகே ஓடா என்ற இடத்தில் சாதாராண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இகேடா. உலகப் போரின்போது இகேடாவின் குடும்பம் பெரும் சிரமங்களை சந்தித்தது.
நிச்சிரன் புத்த மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவரான இகேடா, புத்தமதத்தின் கோட்பாடுகளை பரப்புவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அமைதியான உலகம் அமைய வேண்டும் என்பதே இகேடாவின் முக்கிய நோக்கமுமாக இருக்கிறது. இதை வலியுறுத்தியே இவரது கவிதைகளும், படைப்புகளும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் உலகப் போருக்குப் பின்னர் நிச்சிரன் புத்தமதம் உலகின் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து நிச்சிரன் புத்தமதத்திற்கென ஒரு அமைப்பு 1975ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக இகேடா பொறுப்பேற்றார். ஆனால் அமைப்பின் போக்கு பிடிக்காததால் 1979ம் ஆண்டு பொறுப்பிலிருந்து விலகினார் இகேடா.
இகேடாவிடம் இன்னும் ஒரு பெரும் சிறப்பு உள்ளது. உலகின் பல்வேறு கல்வி நிலையங்களிலிருந்து 211 கெளரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர் இகேடா என்பதுதான் அது.
கவிஞராக மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளராக, அமைதி விரும்பியாக, அமைதிப் பிரசாகராகவும் திகழ்கிறார் இகேடா. இதுதவிர சிறந்த சுற்றுச்சூழல்வாதியாகவும், புகைப்படக்கலைஞராகவும், பியானோ கலைஞராகவும் திகழ்கிறார்.
60க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செய்து பல்துறைப் பிரமுகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இகேடா உருவாக்கிய அமைப்பான சோகா கக்காய் இன்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவான பாரத் சோகா கக்காய் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெறும் இந்த உலக கவிஞர்கள் மாநாட்டின்போது அவருக்கு உலக அமைதி கவிஞர் விருது வழங்கப்படுவது சிறப்புக்குரியது.
சோகா கக்காய் இன்டர்நேஷனல் அமைப்பில் உலகம் முழுவதும் 190 நாடுளைச் சேர்ந்த 10.2 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications